ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எதிர்வரும் ஜூன் மாத ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி தற்போதைய பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கலைக்கப்படும்.
தாம் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இதன்படி பாராளுமன்றம் ஏப்ரல் மாதம் கலைக்கப்படுமென சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதென்றால் ஐந்து வருட காலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும். இந்த ஐந்து வருடங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் பூர்த்தியடைகின்றது.
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் தற்போதுள்ள பாராளுமன்றத்தை சட்டவாக்க சபையாக மாற்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உட்பட அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்துள்ளார். இதன்படி அவர் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லையென்பது உறுதியாகின்றது எனவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.