மட்டக்களப்பு - படுவான்கரைப் பகுதியில் மழை நீரை நம்பி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை போதியளவு மழை பெய்யாமையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வடகீழ் பருவ பெயர்ச்சி மழைக்குரிய காலம் ஆரம்பித்துள்ள போதிலும் இதுவரையில் வேளாண்மைச் செய்கைக்கு போதியளவு நீர் கிடைக்கவில்லை.
நெல்விதைத்து 2 மாதங்களாகியும் மழை இன்மையினால் உயரமான பகுதிகளிலுள்ள நெற்பயிர்கள் வெப்பத்தினால் பாதிப்படையும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விட நிலக்கடலை, கௌப்பி, சோளம், பயறு, போன்ற மேட்டு நிலப்பயிர்களும் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக அந்தப் பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் படுவான்கரைப் பகுதியான பழுகாமம் கம நல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 2000 திற்கு மேற்பட்ட வயல் நிலத்தில் தற்போது பெரும்போக வேளாண்மை, செய்கைபண்ணப்பட்டுள்ளது என கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தெ.வேளவேந்தன் குறிப்பிட்டார்.
பழுகாமம் கமநல கேந்திர நிலையத்திலிருந்து இதுவரையில் 4500 இற்கு மேற்பட்ட உர மூடைகள் விவசாயிகளுக்கு ஒரு மூடை 350 ரூபாவீதத்திற்கு விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment