யாசகர் கை அனாதையாகிப்போன நமது அரசியலும் நம்பிக்கை தரும் புதிய நகர்வுகளும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாயினர் உண்மைதான், ஆனால் யாசகர் கைப்பிள்ளையாக இன்று நமது அரசியலே அனாதையாகிக் கிடக்கிறது, யாசகர்கள் கூட "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" எனும் சரணாகதி நிலை அடைந்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த கால் நூற்றாண்டுகால எனது முஸ்லிம் அரசியல் அனுபவத்தைப் பொறுத்தவரை நாம்சாதித்தவற்றை விட நம் சமூகம் அதனால் சோதிக்கப்பட்டதே அதிகம், போராட்ட அரசியலாக ஆரம்பித்த எமது தனித்துவ அரசியல் சில அரசியல் வியாபாரிகளின் அல்லது தொழிலாளிகளின் சூதாட்ட அரசியலாக மாறிவிட்டுள்ளமை இன்று பகிரங்க இரகசியமாகிவிட்டது.

முஸ்லிம் அரசியலுக்கு தெளிவான இலக்குகளைக் கொண்ட தேசிய,பிராந்திய மற்றும் அடிமட்ட வேலைத்திட்டங்கள் இருக்கவில்லை, இன்றுவரை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகள் அவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்த முறையான ஆவணப்படுத்தல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

தேசிய அரசியலுடன் முஸ்லிம் அரசியலை கோட்பாட்டு மற்றும் விழுமிய அரசியல் இலக்குகளுடன் பயணிக்கச் செய்வதில் நாம் பாரிய பிழைகளை செய்துள்ளோம்.

பூர்விக பூமிகளில் தமிழர்கள் தாயகம் கேட்ட பொழுது நாம் தனியலகு கேட்டோம், இன்று தமிழர்களிடமும் சிங்களவர்களிடமும் எமது பூர்விக இடங்களை இழந்து வருகின்றோம்,

கரையோர மாவட்டம் கேட்டோம் ஆனால் மாவட்டங்களிற்குள் அரச அதிபர் பிரிவுகள்,பிரதேச செயலாளர் பிரிவுகள், உள்ளூராட்சி மன்றங்கள் எல்லைகள் என நிர்வாக மற்றும் பிரதிநிதித்துவ அதிகார அலகுகளின் எல்லை வரம்புகளை பாரிய அளவில் இழந்து வருகின்றோம்.

தொழில் வாய்ப்பு, புதிய குடியேற்றங்கள், நகராக்கங்கள், வீடமைப்பு, வியாபாரத் தொகுதிகள், சுய தொழில் ஊக்குவிப்புக்கள் என பல்வேறு துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ள எமது கல்வி, உயர்கல்வி, வர்த்தகம் பொருளாதாரம் என வாழ்வாதார உரிமைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக எமது உயிரிலும் மேலான சன்மார்க்க விழுமியங்கள், வழிபாட்டுத் தலங்கள், கலாச்சார பாரம்பரிய தனித்துவங்கள் மிகத் திட்டமிட்ட அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன, அதற்கான தேசிய நிகழ்ச்சி நிரல்கள் பூரண அதிகார அனுசரணைகளுடன் இன மத வெறித் தீவிரவாத சக்திகளால் பகிரங்கமாகவே முன்வைக்கப்பட்டுள்ளன.

புதியதோர் தேசிய மற்றும் சமூக அரசியல் பார்வையும், பயணமும் முஸ்லிம் சமூகத்தின் இன்றிய அவசியத் தேவையாகும், எதேச்சதிகார தனி நபர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்கிச் சின்னபின்னப் பட்டு போயுள்ள முஸ்லிம் அரசியலை மீட்டெடுப்பது காலத்தின் காட்டயமாக உள்ளது.

கூட்டுப் பொறுப்புள்ள நல்லாட்சிக்கான விழுமிய அரசியலை சமூகத் தளத்தில் மாத்திரமன்றி தேசிய அரசியல் அரங்கிலும் அறிமுகப்படுத்துவதும்; நேச சக்திகளுடன் இணைந்து சகல சமூகங்களினதும் இருப்பு, பாதுகாப்பு, சமூக சமய,கலாச்சார தனித்துவங்கள் போன்ற அடிப்படை உரிமைகளை உறுதி செய்து கொள்கின்ற தெளிவான இலக்குகளுடன் கூடிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.

அண்மைக்காலமாக தேசிய அரசியல் அரங்கில் இன மத மொழி பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய அரசியலிலும் சமூக அரசியலிலும் நல்லாட்சிக்கான விழுமியங்களை அடையாளப்படுத்திய கூட்டுப் பொறுப்புடன் கூடிய அரசியல் நகர்வுகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மேற்கொண்டு வருகின்றமை முஸ்லிம் அரசியலின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :