இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் உடனடித் தீர்வினை எட்டுவதா? அல்லது சர்வதேசத்திடம் மண்டியிடுவதா? என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயத்தினை முரண்பாடாக எடுத்துக்கொள்வது அரசாங்கத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கும் ஐ.தே.க. எம்.பி. மங்கள சமரவீர, கூட்டு அரசாங்கம் ஒன்று அமைவது மூவின மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் அரசாங்கம் விமர்சித்து வருகின்ற நிலையில் அது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியிடம் வினவிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்குமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ, தமிழ் மக்களோ சர்வதேச தலையீடொன்றினை விரும்பியிருக்க மாட்டார்கள். உண்மையிலேயே இலங்கையில் தேசிய விடயங்களில் சர்வதேசத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பதை நாமும் விரும்புகிறோம். எனினும் அரசாங்கம் தீர்வினை விரும்பவில்லை. அரசாங்கம் இணக்கப்பாட்டினை விரும்பாத சந்தர்ப்பத்தில் சிறுபான்மை மக்கள் தமக்கான தீர்வினை வேறு ஒரு வழிமுறையினூடாகவே பெறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நாடுகளை நாடுவதில் அரசாங்கம் குற்றம் சுமத்த முடியாது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் உடனடித் தீர்வொன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. யுத்தம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் சிந்திக்காது செயற்படுவது நாட்டின் ஒற்றுமையில் பாதிப்பினை ஏற்படுத்துவதோடு சர்வதேசத்தின் தலையீட்டினையும் வலுப்படுத்தும். எனவே, இனப் பிரச்சினை விடயத்தில் உடனடியாகத் தீர்வு காண்பதா? அல்லது நாட்டில் இனப்பிரச்சினைகளை வளர்த்து சர்வதேச அழுத்தத்திற்கு முகம் கொடுத்து இறுதியில் சர்வதேசத்திடமே மண்டியிடுவதா? என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். சர்வதேச பிடியில் இருந்து அரசாங்கம் தப்ப வேண்டுமாயின் இணக்கப்பாட்டிற்கு வருவது அவசியமாகும்.
மேலும், நாட்டின் ஒற்றுமையினை நிலைநாட்ட வேண்டுமாயின் இந்த ஆட்சியினை மாற்றி அமைக்கவேண்டும். இனத்துவேசத்தினை தூண்டி நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தும் அரசாங்கத் தினை விரட்டியடித்து அனைத்து தரப்பின ரையும் மக்களையும் ஒன்றிணைத்து கூட்டாட்சி முறைமையொன்றினை உருவாக்குவதன் மூலமாகவே நாட்டில் அமைதியினை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment