கடந்த இரு வருடங்களாக தடைப்பட்டுள்ள கல்முனைக்குடி சாஹிபு வீதியின் புனரமைப்பு பணிகளை கூடிய விரைவில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மக நெகும நிறுவனத் தவிசாளர் கிங்ஸ்லி ரணவக்க, கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பரிடம் உறுதியளித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்து முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வுத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
இதன்போது குறித்த வீதிக்கு மக நெகும நிறுவனத் தவிசாளர் கிங்ஸ்லி ரணவக்கவை அழைத்து சென்று அவ்வீதியின் அவல நிலையைக் காண்பித்து, அதனால் பொது மக்கள் எதிர்நோக்கி வருகின்ற கஷ்டங்களை விபரித்துக் கூறினார்.
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் அரைகுறை நிலையில் இடை நிறுத்தப்பட்டிருப்பதால் இவ்வீதியில் வசிக்கின்ற மக்கள் மாத்திரமல்லாம பொதுவாக இவ்வூர் மக்கள் அனைவருமே பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக மழை காலங்களில் இவ்வீதியின் மோசமான நிலை காரணமாக இப்பகுதி மக்கள் பெரும் துயரங்களை அனுபவிக்க நேரிடுகிறது. அத்துடன் விரைவில் பருவ மழை ஆரம்பிக்க விருப்பதால் இவ்வீதியும் அதில் அமைந்துள்ளா நூற்றுக்கணக்கான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது என்றும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
ஆகையினால் இவ்வீதியின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பித்து துரித் கதியில் அவ்வேலைத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து உதவுமாறு மக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக முதல்வர் நிஸாம் காரியப்பர் மக நெகும தவிசாளரை வேண்டிக் கொண்டார்.
இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்த மக நெகும தவிசாளர், இது விடயத்தில் தான் உடனடியாகத் தலையிட்டு கூடிய விரைவில் அவ்வேலைத் திட்டத்தை ஆரம்பித்து நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்த இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் கடந்த மே மாதம் முதல்வர் எடுத்துக் கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அது மீண்டும் இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment