அம்பேபிட்டியவிலிருந்து முஹம்மட் பிறவ்ஸ்-
அண்மையில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது அம்பேபிட்டிய பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அரசாங்க உதவியை எதிர்பார்த்து தனது கடைக்கு தானே தீமூட்டிக்கொண்டதாக லங்காதீப பத்திரிகை தனது முன்பக்கத்தில் ஒரு பொய்யான செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது.
குறித்த பகுதிக்கு அண்மையில் சென்று கடை உரிமையாளரான முஹம்மட் நளீம் என்பவரை பேட்டி கண்டபோது பல உண்மைத் தகவல்கள் வெளிவந்தன. அவர் வழங்கிய தகவல்கள் வருமாறு;
பேருவளை, அம்பேபிட்டிய பகுதியில் கீரந்திட்டிய வீதியில் அமைந்துள்ள இர்ஷாத் கிப்ட் வேல்ட் என்ற கடையை வாடகைக்கு எடுத்து நடாத்தி வருகிறேன். எனது கடைக்குள் தீப்பிடிக்கவில்லை. கடைக்குப் பின்னால் கழிவுப் பொருட்களை வீசும் இடத்திலேயே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் தீப்பிடித்தது.
இது அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்து எனது கடைக்கு நானே தீவைத்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக பெரும்பான்மை ஊடகங்கள் பொய்யான செய்தியைப் பரப்பியது. ஆனால், குறித்த தீயினால் எனது கடைக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதனால் நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும் இல்லை.
உண்மையில் நடந்தது என்ன?
எனது கடையை மூடிவிட்டு நித்திரைக்கும் செல்லும்போது கடைக்கு தீவைத்துள்ளதாக செய்தி கேட்டு எனது கடைக்கு வந்தேன். இதன்போது பொது மக்களுடன் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அங்கு குழுமி நின்றனர். கடையின் பின்புறம் கழிவுப் பொருட்களை வீசும் இடத்திலேயே இந்த தீப்பிடித்தது. அத்துடன் அங்கு இரண்டு பெற்றோல் குண்டுகளும் மீட்கப்பட்டன.
கடையிக்குள் தீ பரவ ஆரம்பிப்பது தெரிந்தவுடன் உள்ளே இருக்கும் மின் ஆழியை (சுவிட்ச்) செயற்படுத்துவதற்கு முன்பக்கமாகவுள்ள கதவை திறப்பதற்கு வெளிச்சம் தேவைப்பட்டது. என்னிடம் நிறை சாவிகள் இருப்பதால் அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கங்களை இட்டுள்ளேன். கதவைத் திறப்பதற்கு சரியான சாவியை எடுப்பதற்காக தீக்குச்சி ஒன்றை பற்றவைத்தேன். இதன்போதே மோப்பநாய் என்னருகில் வந்தது.
இதை வைத்தே லங்காதீப பத்திரிகையில் பொலிஸ் மோப்ப நாய் என்னை காட்டிக் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் பொலிஸார் மோப்ப நாயை அங்கு சுதந்திரமாக நடமாட விடாமல் கையில் பிடித்து வைத்திருந்தனர். சரியான குற்றவாளியைப் பிடிப்பதற்கு அவர்கள் தவறிவிட்டனர்.
இந்நிலையில் சம்பவதினம் நள்ளிரவு 1 மணியளவில் என்னை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 3 மணிவரை என்னிடம் வாக்குமூலம் பெற்றனர். ஆனால், குறித்த தீவைப்பு குறித்து பொலிஸ் நிலையத்தில் எவ்வித முறைப்பாடும் செய்யவில்லை. இதற்காக எவ்வித நஷ்டஈடும் கோரவில்லை. இங்கு எதிலும் எனது கைரேகை இல்லை. ஆனால், பொலிஸார் என்னை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். (கண் கலங்குகிறார்)
இந்தக் கடை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. தனது கடையை உடனடியாக தருமாறு அவர் என்னிடம் வற்புறுத்துகிறார். இதனால் அவருக்கும் இச்சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாமென நான் சந்தேகிக்கிறேன் என்று தெரிவித்தார்.
லங்காதீப பத்திரிகையின் மறுமுகம்
அளுத்கம பிரதேசத்தில் லங்காதீப பத்திரிகைக்காக செய்தி சேகரித்துக்கொண்டிருந்த சரத் சிறிவர்தன கடந்த ஜூன் 15ஆம் திகதி அங்கு கலவரத்தில் ஈடுபட்ட சிங்கள காடையர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். அத்துடன் அவரது புகைப்படக்கருவியும், வீடியோ கமெராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவரை புலனாய்வுத்துறையினரும் விசாரித்துள்ளனர்.
இதனை ஒரு சிறிய செய்தியாகவே லங்காதீப வெளியிட்டிருந்தது. தனது ஊடகவியலாளர் தாக்கப்பட்டிருந்தார் என்று தெரிந்திருத்தும் அவர் சிங்களவர்களால் தாக்கப்பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அதை சிறியதொரு செய்தியாக வெளியிட்டிருந்தது. ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரானது என்றால், இல்லாத செய்தியொன்றை கொட்டை எழுத்துக்களில் லங்காதீப தனது முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளது.
தாக்கப்பட்டவர் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் இன, மதபேதம் பாராது அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் சரத் சிறிவர்தனவை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு திரும்பினர்.
இவ்வாறான இனத்துவசே செய்திகளைக் கண்ட பின்னராவது முஸ்லிம்களுக்கான தனியான ஊடகத்தின் தேவை உணரப்படவேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய முக்கிய தேவையான தனியான ஊடகமொன்றை ஆரம்பிப்பதற்கு முன்வாருங்கள்.
0 comments :
Post a Comment