முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு எம்மீது குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மீதான குற்றச் சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுங்கள் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தீவிரவாதிகளின் செயற்பாடுகளால் பொது மக்களின் சொத்துக்கள் நாசப்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் அவர் கூறினார்.
அளுத்கம சம்பவம் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சில தாக்குதல் சம்பவங்களில் பொதுபல சேனா பௌத்த அமைப்பிற்கு தொடர்புள்ளதென முஸ்லிம் கட்சிகள் அமைப்புகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அளுத்கம சம்பவத்திற்கும் எமது அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றோம். எனினும் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி எம்மை இழிவுபடுத்தும் செயலை எவரும் செய்ய வேண்டாம். முஸ்லிம் மத தீவிரவாதிகளுக்கு எதிராக நாம் குரல் கொடுக்கின்றமையினால் பொதுபலசேனா அமைப்பு இனவாத அமைப்பாகாது. இன்றும் பல இஸ்லாமிய மதத்தவர்கள் எமது உதவிகளை நாடியும் எமது பாதுகாப்பினை கேட்டும் வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித தயக்கமும் இன்றி நாம் உதவி செய்கின்றோம்.
நாட்டில் சிங்கள பௌத்த மக்கள் எவ்வாறு உரிமைகளை அனுபவிக்க முடியுமோ அதே உரிமைகளும் சுதந்திரமும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் உண்டு. எனினும் முஸ்லிம் மத வாதத்தினையும் தீவிர வாதத்தினையும் பரப்பி சிங்கள தமிழ் இனத்தை அழிக்கும் தீவிரவாத செயலுக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். அதேபோல் அளுத்கம சம்பவத்தில் பொதுபலசேனா அமைப்பினர் தொடர்பு பட்டுள்ளனர் என்றால் அதனை ஆதாரங்களுடன் நிரூபித்து காட்ட வேண்டும். முஸ்லிம் கட்சிகளும் ஊடகங்களும் எம்மை சாடுவதனால் சிங்கள பௌத்த மக்கள் எம்மை நிராகரிக்கப்போவதில்லை மத்திய கிழக்கில் சென்று தீவிரவாத தலைவர்களை சந்தித்து முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை இலங்கைக்குள் பரப்பியது இந்த முஸ்லிம் கட்சிகளினதும் அமைப்புக்களினதும் தலைவர்களேயாவர். முதலில் அவர்களை அரசாங்கம் தண்டிக்காது எம்மை சாடுவதை நாம் கண்டிக்கின்றோம்.
முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது. அப்பாவி முஸ்லிம் மக்களை மத தீவிரவாதத்திற்குள் உட்படுத்தி நாட்டிற்கு எதிராக ஏவி விடும் செயலை முஸ்லிம் அமைப்புக்கள் செய்கின்றன. இதுவே நாட்டில் இனக் கலவரம் ஏற்படவும் மோதல்கள் உருவாகவும் காரணமாகவும் அமைந்துள்ளது. தீவிரவாதிகளின் வன்முறைகளினால் அப்பாவி பொது மக்களின் சொத்துக்கள் சேதமாகின்றது. அதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment