பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8 மணி அளவில் ஒரு கார் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே வந்தபோது டேங்கர் லாரி மீது கார் திடீரென்று மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 2 பேர் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, உயிருக்கு போராடிய 2 பேரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியானவர்கள் சென்னையை சேர்ந்த சங்கர் (23), சித்து (22) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
காயம் அடைந்த 2 பேரில் ஒருவர் நடிகர் நாசரின் மகன் பைசல் என்பதும் மற்றொருவர் சண்முகசுந்தரம் என்பதும் தெரிய வந்துள்ளது. பலியானவர்களில் ஒருவர் நடிகர் நாசரின் நெருங்கிய உறவினரின் மகன் என்றும் கூறப்படுகிறது.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் சிறிது நேரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரினுள் பாண்டிச்சேரியில் உள்ள கடையில் எடுக்கப்பட்ட புதிய துணிகள் மற்றும் லேப்டாப் இருந்தன. அனைவரும் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது.
நாசரின் மகன் பைசலுக்கு மயக்க நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி அறிந்ததும் நடிகர் நாசர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
விபத்தில் சிக்கிய லாரியின் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணி. இன்று மதியம் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments :
Post a Comment