பாடசாலை காதலர்களுக்கு பஸ் வண்டிக்குள் முறையற்ற வகையில் காதல் சல்லாபம் புரிய இடமளித்த தனியார் பஸ் வண்டியை தம்புள்ள பிரதேசத்தில் சேவையில் ஈடுபட தடை செய்துள்ளதாகவும் அவ்வாறு மீறி சேவையில் ஈடுபடுமாயின் தானே அதனை அடித்து நொறுக்க தயங்கப் போவதில்லை எனவும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
கலேவெலயில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
தம்புள்ள பஸ் நிலையத்தில் தங்களுக்கான சேவை நேரம் வரும் வரை பஸ் வண்டியை நிறுத்தி வைத்து அதன் கண்ணாடிகளை திரைச்சீலையால் மூடி பாடசாலை காதலர்களுக்கு முறையற்ற வகையில் சமூக சீரழிவை ஏற்படுத்தும் வகையில் பஸ் வண்டியை வாடகைக்கு விடும் செயல் சமூக விரோத நடவடிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ள என கூறும் போது மக்கள் எம்மைத்தான் மனதில் கொள்வார்கள். இங்கு நான் இருக்கும் வரை இவ்வாறான சமூக விரோதச் செயல்களுக்கு இடமளிக்க மாட்டேன். பணத்திற்கு அடிமையாகி பலர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான சமூக விரோதச் செயல்கள் அதிகரித்திருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் குறித்து பாரிய பொறுப்பு உள்ளது. பிள்ளைகள் தானே ஒழுக்கத்துடன் வளரும் என இருந்து விடக்கூடாது. அவர்களை ஒழுக்கமாக வளர்ப்பது பெற்றோர்களின் பொறுப்பாகும். நாட்டின் எதிர்காலத்தை பணத்திற்காக சீரழிக்க இடமளிக்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment