இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ரயில் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையில் குன்னூர் வந்து கொண்டிருந்த மலை ரயிலை நாம் தமிழர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் கழகம் அமைப்பினர் மறிக்க முயன்றனர்.
இதில் ஈடுபட்ட 32 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மாலையில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்டுச் சென்ற மலை ரயில் மீது 200-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்ததோடு மறியலிலும் ஈடுபட்டனர்.
அனைவரையும் குன்னூர் காவல் துறையினர் தடுத்ததால் இருதரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதில், மாவட்டச் செயலாளர் சகாதேவன், மாவட்ட துணைச் செயலர் சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்தியாவின் மதுரை மாவட்டம், சமயநல்லூரில் இலங்கைக் கொடியை எரிக்க முயன்ற நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மேற்கு ஒன்றிய நாம் தமிழர் இயக்கம் சார்பில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமார் செல்லக்கூடாது, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று கோரி சமயநல்லூரில் அஞ்சல் அலுவலகம் முற்றுகை போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு மேற்கு ஒன்றியச் செயலார் கண்ணன் தலைமை வகித்தார். புறநகார் மாவட்ட செயலார் செங்கண்ணன் போராட்டத்தை தொடக்கிவைத்தார்.
பின்னர், இலங்கை தேசியக் கொடியை எரிக்க முயன்ற, நாம் தமிழர் இயக்க இணை செயலார் செந்தில், ஒன்றியச் செயலார்கள் அலங்கை பாக்கியராஜ், திருமங்கலம் மருது, ஆனையூர் முருகன், அய்யப்பன் உள்பட 20 பேரை சமயநல்லூரில் பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

0 comments :
Post a Comment