(எம்.பைஷல் இஸ்மாயில்)
வடமாகாண சபை தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டு பல வருடங்களின் பின் வடமாகாண சபை எதிர்கொள்ளும் இந்த தேர்தல் வடக்கு மக்களை மாத்திரமன்றி கிழக்கு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தநிலையில் வடக்குத் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படுமா? அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் அதன் முடிவுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதை இன்று சர்தேசம் உள்ளிட்ட பலரின் கேள்வியாகவும், மிக உன்னிப்பான பார்வையாகுவம் அமைந்து காணப்படுகின்றது.
காரணம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கைப் பொருத்தவரை தற்போது மேற்கொள்ளப்படும் தேர்தலானது, இலங்கையில் தமிழர்களின் அதிக ஆதரவைப் பெற்ற கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இத்தேர்தல் களம் சார்பாக அமைந்துவிடும் சாத்தியம் உள்ளது.
இந்தநிலையில் வடக்கின் ஆட்சி அதிகாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கைகளுக்குள் செல்லுமாயின் அங்கு அரசாங்கத்தின் செல்வாக்கு குன்றுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்பதோடு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கொண்ட தற்போதைய மாகாண சபை ஆட்சி முறையால் அது அரசாங்கத்திற்கு சவாலானதொன்றாகவும் அமைந்து விடக்கூடும். இதனை அரசாங்கம் விரும்புமா என்பதே பலரின் கேள்வியாகவும், எதிர்பார்ப்புமாகும்.
வடக்கைப் போன்று போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கைப் பொருத்தவரை மீட்கப்பட்ட குறுகிய காலத்திலேயே தேர்தல் நடத்தப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.
எனினும் அப்போதைய சூழ்நிலையில் கிழக்கின் ஆட்சி அதிகாரத்தை அரசாங்கத்தால் கைப்பற்ற முடியும் என்கின்ற நிலைப்பாடே இதற்கு காரணமாக அமைந்தது. இதனாலேயே கிழக்கு மாகாண சபை, வடமாகாண சபையை போல பரிய எதிர்ப்புகளுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுக்கவில்லை என்பதே பரவலான கருத்து.
எது எவ்வாறு இருப்பினும், யுத்ததால் பாதிக்கப்பட்ட வடக்கைப் பொருத்தவரை அங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க தற்போது உள்ளூராட்சி தேர்தல் ஒன்று இன்றியமையாதது என்பது எவராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாத ஒன்றாகும்.
இவ்வேளையில், 13 வது திருத்த சட்டத்திற்கு அமைவாகவே வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை சாதகமான ஒன்றாயினும் அரசாங்கத்தின் சில பங்காளிக் கட்சிகளே 13 வது திருத்த சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வடக்கில் முன்னெடுக்கப்படும் தேர்தல் எவ்வாறான பெருபேறுகளை தரப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மூன்று தசாப்தகால யுத்ததால் வடக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டௌ நினைக்கும் மக்களுக்கு இத்தேர்தல் கைகொடுக்கப் போகிறதா? அல்லது மேலும் அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கப்போகிறதா? என்பதை வடக்கு மக்கள் மட்டுமல்ல கிழக்கு மக்களும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

0 comments :
Post a Comment