பாகிஸ்தான் "முன்னாள்” அதிபர் முஷாரப்பை கைது செய்யும்படி, இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும், முஷாரப், அவசரமாக நீதிமன்றத்திலிருந்து வெளியேறி, தன் பண்ணை வீட்டிற்கு சென்று விட்டார்.பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 99ம் ஆண்டு, பிரதமர் நவாஸ் ஷரீப் அரசை கவிழ்த்து விட்டு, ஆட்சியை கைப்பற்றினார்.
2008ல், நடந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்ததால், பதவியிலிருந்து விலகினார். போதிய பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால், பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, 2007ல் தலைமை நீதிபதி உட்பட 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்து, அவசர நிலையை பிறப்பித்தார்.
இவரது இந்த செயல் தேச துரோக செயலாக குற்றம் சாட்டப்பட்டு, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. பல்வேறு நகரங்களில் இவர் மீது வழக்குகள் இருந்ததால், துபாய் மற்றும் லண்டனில் இவர் சில ஆண்டுகளாக தங்கியிருந்தார்.
அடுத்த மாதம், 11ம் திகதி, பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக, கடந்த மாதம் நாடு திரும்பினார். "அரசியலமைப்பை மீறி நடந்த முஷாரப்பை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது' என, வழக்கறிஞர்கள் பலர், தேர்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தனர். இதையடுத்து, தேர்தல் தீர்ப்பாயம், முஷாரப்பின் நான்கு வேட்பு மனுக்களையும் நிராகரித்து விட்டது. இந்த நிலையில், நேற்று, ஜாமினை நீட்டிக்க கோருவதற்காக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஷவுகத் அஜிஸ் சித்திக் விசாரித்தார். ஜாமினை நீட்டிக்க மறுத்த நீதிபதி, முஷாரப்பை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவை கேட்டதும், முஷாரப், தன் பாதுகாவலர்களுடன், அங்கிருந்த கூட்டத்தை தள்ளிக்கொண்டு அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் அவர் தற்போது தங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், முஷாரப்பை கொல்ல திட்டமிட்டுள்ளன. எனவே, அவருக்கு சிறையில் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால், இஸ்லாமாபாத் பண்ணை வீட்டிலேயே, பாதுகாப்பு கருதி அவர் சிறை வைக்கப்படலாம் என, சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment