(எம்.எம்.முபாரக்)
அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் செல்லும் புறத்தோட்டம் வீதி அகலமாக்கப்படாமல் குன்றும், குழியுமாகக் காணப்படுகின்றது. இப்பகுதி மக்கள் பலமுறை அட்டாளைச்சேனை பிரதேச சபை, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகின்றது.
மழை காலத்தில் இப்பாதை குளமாகக் காட்சியளிப்பதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். இனி மேலாவது பிரதேச சபை இப் பாதையை புணரமைக்க நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி உள்ளது.
தற்போது பிரதேச சபையின் புதிய தவிசாளராக கடமையேற்றிருக்கும் எம்.ஏ.அன்ஸில் இப்பாதை விடயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்பதில் இப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கிழக்கு மாகாண அமைச்சர் பல கூட்டங்களில் இப்பாதையை அகலமாக்கி புணரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கூறியும் அவரும் பின்னர் இது விடயத்தில் இரட்டை வேடம் போட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த காலங்களில் இப்பிரதேச அரசியல் வாதிகள் இப் பாதை அகலமாக்கப்பட்டு புணரமைக்கப்படும் என்று பல தடவைகள் வாக்குறுதி வழங்கியும் இது வரை பாதை வேலைகள் நடைபெறவில்லை. புதிய தவிசாளர் இந்த விடயத்தில் அக்கரை செலுத்தாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதிப்போம் என்று புறத்தோட்டம் மக்கள் சார்பாக ஏ.எல்.ஜெமீல் காட்டமாக தெரிவித்தார்.
0 comments :
Post a Comment