தென்கிழக்குப் பல்கலைக்கழக பால்நிலை, சமநிலை சமத்துவ நிலையத்தினால் கலை கலாசார பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடங்களினதும் சிரேஷ்ட மாணவர்களுக்கான ‘பாலியல் மற்றும் பால்நிலை ரீதியான வன்முறைகள்’ தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக பால்நிலை, சமநிலை சமத்துவ நிலையத்தினால் அதன் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதி நூலகருமான திருமதி எம்.எம். மஸ்றூபா தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் கலந்து கொண்டார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினூடாக தாபிக்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் பணி பற்றி எடுத்துக்கூறப்பட்டதுடன் பலக்கலைக்கழக மாணவர்களுக்கு பாலியல் மற்றும் பால்நிலை ரீதியான வன்முறைகள் பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது. அத்துடன் இவ்வாறான வன்முறைகள் தொடர்பாக விழிப்புணர்வடன் இருக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் அனைத்து மாணவர்களினதும் கல்வியுரிமையை உறுதிப்படுத்துவதில் இதன் முக்கியத்துவம் பற்றியும் விபரிக்கப்பட்டது. அத்துடன் இவ்வாறான வன்முறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தலும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலை கலாசார பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட், நூலகர் எம்.எம். றிபாயுடீன், அரசியல் விஞ்ஞானத்துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில், பேராசிரியர்களான எம்.ஐ.எம். கலீல், எம்.ஏ.எம். றமீஸ் அப்துல்லாஹ் உட்பட விரிவுரையாளர்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.