கொழும்பு – பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகரை விடுவிக்க வேண்டுமாயின் இரண்டு கோடி ரூபாவை கப்பபமாக செலுத்த வேண்டுமென கடத்தற்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஹமட் ஷகீம் என்ற குறித்த வர்த்தகரை கடத்தியவர்கள், அவரது தந்தையை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கப்பம் குறித்து அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் கடத்தப்பட்டவரின் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் இரண்டு கோடி ரூபாய் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உங்கள் மகன் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கின்றார், அவரை விடுவிக்க வேண்டுமாயின் இரண்டு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமற்போன குறித்த வர்த்தகர் தொடர்பில் இதுவரை அவரிடம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள 15 வர்த்தகர்களிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள், வழக்குகள் குறித்தும் இந்த விசாரணையின்போது செலுத்தப்பட்டுள்ளது.
வர்த்தகருடன் முரண்பட்டவர்களுடனும் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளதோடு, கடத்தப்பட்ட இடத்தில் காணப்படும் சி.சி.ரி.வி கமராக்களின் காட்சிகள் நேற்றைய தினம் கண்காணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி கொத்தலாவலை அவனியூவைச் சேர்ந்த மொஹமட் ஷகீம் என்ற வர்த்தகர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.