விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த சில சலுகைகளை சிறைச்சாலை நிர்வாகம் அதிரடியாக ரத்துச் செய்துள்ளது.
சிறைக் கைதியொன்றைப் பார்ப்பதற்காக நாளொன்றுக்கு மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்கிற வரைமுறையை ஞானசாரருக்காக இதுவரை தளர்த்தியிருந்த சிறைச்சாலை நிர்வாகம், நேற்று (06) முதல் அந்த சலுகையையும் ரத்துச் செய்துள்ளது.
நேற்றைய தினம் மட்டும் அவரைப் பார்ப்பதற்காக, பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே உட்பட்ட 40 பேர் சிறைச்சாலை வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி, ஞானசார தேரர் அண்மையில் ஊடகங்களுக்கு எழுதிய கடித விவகாரமே இதற்குக் காரணம் எனவும் அறியக் கிடைக்கிறது.
ஞானசாரரின் மேற்படி கடிதம் தொடர்பில் பொதுமக்கள் பலர் தொலைபேசியூடாக சிறைச்சாலை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு கேள்விகளை எழுப்பி வருவதாகவும் தகவல்கள் சுட்டுகின்றன.