முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சில சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு நடத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் வேட்பாளர் பதவி வழங்கப்படாது எனினும் வேட்பாளராக போட்டியிட முடியும் என ஜனாதிபதி இணங்கியிருந்தார்.
எனினும், எழுந்த எதிர்ப்பு காரணமாக வேட்பாளராக போட்டியிடவே அனுமதியளிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். இதன்படி, மஹிந்த தனியான கட்சியொன்றில் போட்டியிடுவார் என அவர் தெரிவித்துள்ளார்.