பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை ஏந்திச் சென்ற "குளோபல் சுமூத் புளோட்டிலா" (Global Sumud Flotilla) கப்பல் குழுவில் பயணித்தபோது, இஸ்ரேலிய இராணுவத்தினரால் சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் சமீரா மஹ்பூப்தீன் நேற்று (21) அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவ்விடயத்தை பலஸ்தீனுக்கான இலங்கை தூதுவர் பௌசர் பாரூக் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது இஸ்ரேலில் இருந்து துருக்கிக்கு நாடு கடத்தப்படவுள்ள சமீரா, அங்கிருந்து விரைவில் தாய்நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமீராவின் இந்த உடனடி விடுதலை குறித்து 'வுமென்ஸ் கோர்ப்ஸ்' (Women's Corps) பெண்கள் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் தனது மகிழ்ச்சியையும் நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது நாட்டின் துணிச்சலான பெண் செயற்பாட்டாளரான சமீராவின் பாதுகாப்பை உறுதி செய்து, அவரை இஸ்ரேலிய சிறைப்பிடிப்பில் இருந்து மீட்குமாறு நாம் விடுத்த அவசரக் கோரிக்கையினை ஏற்று, உடனடியாகக் செயற்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கும், வெளிநாட்டு விவகார அமைச்சு மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சர்வதேச அளவில் எமது பிரஜை ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்ட போது, இலங்கை அரசாங்கம் காட்டிய துரித இராஜதந்திர நகர்வுகளும், காட்டிய தீவிர அக்கறையும் பாராட்டுக்குரியவை.
துருக்கி வழியாக அவர் பாதுகாப்பாக இலங்கை வந்தடைய தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வார்கள் என நம்புகிறோம் எனவும் வுமென்ஸ் கோர்ப்ஸ்' பெண்கள் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment