மன்றத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல். பரீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்கள், அனாதைகள், விதவைகள், அங்கவீனர்கள் உள்ளிட்ட பலருக்கு உலருணவு பொதிகளும் நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய தலைவர், மன்றத்தின் சேவைப் பயணத்தை நினைவுகூர்ந்தார். 1986 ஆம் ஆண்டு “அன்ஸாரிகள் சங்கம்” என தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, பின்னர் 2004 சுனாமி பேரழிவுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தனது பணிகளை விரிவுபடுத்தி, 2008 ஆம் ஆண்டு “அல்-அமானா நற்பணி மன்றம்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சுனாமி பாதிப்புக்குப் பிறகு வீடுகளை இழந்த மக்களுக்கு நிலம் பெற்றுத்தருதல், குடியிருப்புகள் அமைத்தல், குடிநீர், மின்சாரம், வீதி வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்ற பணிகளை மன்றம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த இருபது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குடியேறி வாழும் வகையில் நிலங்கள் வாங்கி வழங்கப்பட்டதுடன், அந்தப் பகுதிகளில் வீதிகள் அமைத்தல், மின்சார வசதிகள் ஏற்படுத்தல் போன்ற பணிகளுக்கு பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டில் மட்டும் வீதி, மின்சாரம் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இவ்வாண்டும் மேலும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேவேளை, புதிய மையவாடி அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், பிரதேச செயலக அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்தார் விசேட மார்க்க உரையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளைத்தலைவர் எம்.எம்.எம். சலீம் (சர்க்கி) நிகழ்த்தினார்.
சமூக ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சேவை உணர்வை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது.

0 comments :
Post a Comment