கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் செயல்படும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் சேவைகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்தும் நோக்கில் விசேட உயர்மட்ட மீளாய்வுக் கூட்டம் கடந்த (21) ஆம் திகதி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்களுக்கு வினைத்திறன் மிக்க, தடையற்ற மற்றும் தரமிக்க சுகாதார சேவைகளை வழங்கும் வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் உரையாற்றிய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் மற்றும் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி. மசூத் ஆகியோர், சுகாதார நிறுவனங்களின் உட்கட்டமைப்புகளை நவீனமயப்படுத்துதல், சேவைகளை திறன்படுத்துதல் மற்றும் நோயாளி மையப்படுத்தப்பட்ட சேவை வழங்கல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினர்.
தொடர்ந்து பல்வேறு துறைகளின் செயல்திறன் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம். மாஹிர், தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம். ஹில்மி ஆகியோர் விளக்கமளித்தனர். மருத்துவ ஆய்வுகூட சேவைகள் தொடர்பில் அப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச். ரிஸ்பின் விளக்கமளித்ததுடன், நிதி முகாமைத்துவம் குறித்தும் கணக்காளர் திருமதி உசைனா பாரிஸ் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.
இக்கூட்டத்தில் சம்மாந்துறை, நிந்தவூர் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பிரதேச வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் PMCU பொறுப்பு வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து கருத்துகளை முன்வைத்தனர்.
கூட்டத்தின் முடிவில், பிராந்திய சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்த பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், சில வைத்தியசாலைகளில் நிலவும் அத்தியாவசியத் தேவைகளை கருத்தில் கொண்டு மருத்துவ மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments :
Post a Comment