தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம்



னைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (25.02.2026) மதிய இடைவேளையில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம்.ஏ. முனாஸ் தலைமை வகித்ததுடன், சங்கத்தின் செயலாளர் எம்.எம்.எம். காமில் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெருமளவான ஊழியர்கள் கலந்துகொண்டு, தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் போது, பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள், ஓய்வூதிய நலன்கள் மற்றும் நியமன நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவுகளை எடுக்க 01.03.2026 அன்று கொழும்பில் நேரடியாக சந்தித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

முக்கிய கோரிக்கைகள்
அரச சேவைக்கும் பல்கலைக்கழக சேவைக்குமிடையே நிலவி வந்த சம்பள விகிதத்தை படிப்படியாகக் குறைத்த நடவடிக்கையை திருத்திக் கொண்டு, பழைய நிலையை மீட்டெடுத்தல்.
பல்கலைக்கழக பணிக்குழுவினர் நீண்டகாலப் போராட்டத்தின் மூலம் பெற்றிருந்த மாதாந்த ஈடுசெய்யும் கொடுப்பனவு (MCA) 45% இலிருந்து படிப்படியாக 36% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதை திருத்தி, உடன்பட்டபடி 75% ஆக உயர்த்திக் கொள்ளுதல்.
பல்கலைக்கழக பணிக்குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட கொடுப்பனவை தவறான விளக்கங்களின் அடிப்படையில் ரத்து செய்த நடவடிக்கையை மீளாய்வு செய்து, அதனை மீண்டும் வழங்குதல்.
பல்கலைக்கழக பணிக்குழுவினருக்கான அதிக நேர (Overtime) கணக்கீட்டை அதிமேதகு ஜனாதிபதி அறிவித்த வழிமுறைகளுக்கு அமைவாக திருத்திக் கொள்ளுதல்.

மேலதிக கோரிக்கைகள்

i) ஓய்வூதிய முறையின் நலன்களை அதிகரித்து, ஊழியர்களின் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

ii) தையல் கூலி, கடன் எல்லைகள் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளை தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்தல்.

iii) நியமன நடைமுறைகளில் நிலவி வரும் குறைபாடுகளை திருத்தி, நியாயமான மற்றும் வெளிப்படையான முறையை நடைமுறைப்படுத்தல்.

iv) இடர் கடன் சுற்றறிக்கையை திருத்தி, ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்தல்.

பல்கலைக்கழக ஊழியர்கள் தங்களது உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், தேவையான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொடர்ச்சியான போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.


















 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :