சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், மிகக் குறைந்த முதலீட்டுடன் தனது தொழில்பயணத்தை ஆரம்பித்ததாக அவர் நினைவுகூர்கிறார். மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்து திரட்டிய பணத்தில் வாங்கப்பட்ட, 42 ශ්රී 1762 என்ற இலக்கத் தகட்டை கொண்ட ஒரு சிறிய லொறிதான், இன்றைய பிரமாண்டமான ‘அரலிய குழும’ (Araliya Group) வர்த்தக சாம்ராஜ்யத்தின் அடித்தளமாக அமைந்ததாக அவர் உணர்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகச் சொகுசு வாகனங்களில் ஒன்றாகக் கருதப்படும் Rolls Royce Phantom காரை வாங்கியுள்ளமை தொடர்பான பதிவிலேயே, தனது கடந்த கால நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், பழைய லொறியும் இன்றைய சொகுசு காரும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடப்பட்டு, வெற்றியின் உண்மையான அர்த்தம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சியே வெற்றியின் ரகசியம்
“நாற்பது வருடங்களுக்கு முன் அந்தச் சிறிய லொறியுடன் தொடங்கிய பயணம்தான், இன்று என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் பல சவால்களையும் துன்பங்களையும் சந்தித்தேன். ஆனால் இலக்கை அடையும் வரை நான் ஒருபோதும் ஓயவில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டத்தின் விளைவு அல்ல; அது தொடர்ச்சியான உழைப்பும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் சேர்ந்த பலன் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தி
இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவர் விடுத்துள்ள அழைப்பில்,
“உங்கள் கனவுகளைத் தைரியமாகத் துரத்துங்கள். எந்தச் சூழ்நிலையிலும் முயற்சியை கைவிடாதீர்கள். உங்கள் இலக்கு நிறைவேறும் வரை கடுமையாக உழையுங்கள்,” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது இலங்கையின் அரிசி உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறைகளில் முக்கிய ஆளுமையாக விளங்கும் டட்லி சிறிசேனவின் இந்த வெற்றிக் கதை, ஒரு சாதாரண மனிதனும் தன் உழைப்பால் எத்தகைய சிகரத்தையும் அடைய முடியும் என்பதற்கான உயிர்ப்பான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

0 comments :
Post a Comment