கிழக்கு மாகாண கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் செயற்திறனை விருத்தி செய்யும் நோக்கில், பல்வேறு பயிற்சித் திட்டங்களை கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.
இதற்கமைவாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான பொ.தனேஸ்வரனி வழிகாட்டல் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சி. ஜலால்தீனின் நெறிப்படுத்தலில் இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறன்றன.
இதன் ஓர் அங்கமாக அக்கரைப்பற்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயிற்சி செயலமர்வில் தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பரீட், சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம். அஷ்ரப் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.
கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திக்கும் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்குமான பொறுப்பு கூட்டுறவுத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் கூட்டுறவுத்துறையை முன்னேற்றுகின்ற பணியை கூட்டுறவுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
நிலையான செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு கூட்டுறவு சங்கங்களுக்கு வழிகாட்டுதல், தரமான உற்பத்திகள் மற்றும் சேவைகள் வழங்குவதனூடாக சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தல், உற்பத்தி தொழில் முயற்சிகள் போன்ற நோக்கங்களை அடைதல், கணக்கியலில் வெளிப்படைத் தன்மையை பேணுதல் என்பன இவ்வேலைத்திட்டத்தின் நோக்கங்கள் என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.

0 comments :
Post a Comment