"மலைப் பத்தாண்டு" 10 ஆண்டு பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் மாவட்ட அளவில் முன்மொழிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளது.- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



முனீரா அபூபக்கர்-

Ø “மலைப் பத்தாண்டு” பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் மாவட்ட அளவில் முன்மொழிவுகளைப் பெற ஆரம்பம்...

Ø மதிப்பிடப்பட்ட தொகை ரூ.10,000 மில்லியன்...

Ø கண்டி, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இத்திட்டம் செயற்படுத்தப்படும்...


"மலைப் பத்தாண்டு" 10 ஆண்டு பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் மாவட்ட அளவில் முன்மொழிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளது.

மலைப் பத்தாண்டு வேலைத்திட்டம் இந்த வருடம் 10 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அந்த மாவட்டங்கள் கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் ஆகும்.

இந்த 10 மாவட்டங்களின் 89 பிரதேச செயலகப் பிரிவுகளில் 4,498 கிராம உத்தியோகத்தர்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்துக்கான திட்ட முன்மொழிவுகள் பிரதேச மட்டத்தில் தயாரிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் பிரதேச செயலாளர் குழுக்களின் பரிந்துரையுடன் மாவட்ட குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் (26) மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் மலைப் பத்தாண்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இது நடைபெற்றது.

மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க மற்றும் தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லியம் கமகே தலைமையில் நடைபெற்றது.

மாத்தறை மாவட்டத்தின் 05 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 214 கிராம அலுவலகர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் இங்கு உரையாற்றினார். அக்குரஸ்ஸ, பிடபெத்தர, முலட்டியான, பஸ்கொட மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.

கிராமத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வருவதாக தெரிவித்த அமைச்சர், மக்களின் பங்களிப்புக்கு முன்னுரிமை அளித்து இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்வருடம் மாத்தறை மாவட்டத்திற்கு அபிவிருத்தி நிதியின் கீழ் 402 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மலைப் பத்தாண்டு எனப்படும் பத்தாண்டு கால பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10,000 மில்லியன் ரூபாவாகும். இதன் கீழ் ஒரு பிரதேச செயலகத்திற்கு தலா 100 மில்லியன் ரூபா கிடைக்கும்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 10 முக்கிய அபிவிருத்திப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது வாழ்வாதாரம், சந்தை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாடு, கல்வி, குடிநீர் வசதி, விவசாயம் மற்றும் சிறு நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்கவை, தொலைபேசி மற்றும் இணையம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் வீட்டு வசதிகளை மேம்படுத்துதல். மலைப் பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு விரைவான மற்றும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கு மாவட்ட மற்றும் பிரதேசக் குழுக்களின் உடன்பாடு கிடைத்ததும், மாவட்டச் செயலாளர்களின் முழு ஈடுபாட்டுடனும், இதர அரசு நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் முழு ஆதரவுடனும் கூட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை ஜனாதிபதி அலுவலகம், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் மேற்பார்வை செய்கிறது.

இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாதாச கொடித்துவக்கு, வீரசுமண வீரசிங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்தியானந்த, மாத்தறை மாவட்ட செயலாளர் வை. விக்கிரமசிறி மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :