




மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பினருக்கு இன்று உத்தரவிட்டார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவோரை கைது செய்யுமாறும், அவர்கள் பயணிக்கும் வாகனங்களை கைப்பற்றுமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை நாட்டிலிருந்து அவர் வெளியேறி, மாலைதீவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஜனாதிபதி ஜுலை 13 ஆம் திகதி பதவி விலகுவார் என முன்னதாக அறிவித்திருந்த சபாநாயகர், இன்னும் பதவி விலகல் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என இன்று அறிவித்துள்ளார். எனினும், இன்றைய தினத்துக்குள் இது தொடர்பில் அறிவிப்பொன்றை விடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இருந்து பிரதமர் அலுவலகம்வரை இன்று காலை பேரணியொன்று ஆரம்பமானது.
கொழும்பு 7 ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகம் நோக்கி சென்ற போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டனர். எனினும், வீதித்தடைகளை தள்ளிவிட்டு முன்னோக்கி நகர போராட்டக்காரர்கள் முற்பட்டவேளை, நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஊரடங்கு சட்டமும், அவசரகால நிலையும் பிரடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாவார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அது தொடர்பிலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
0 comments :
Post a Comment