கஷ்டங்கள் நீங்கி தினம் நல்லன நடக்கும் நாடொன்றை நோக்கி மக்கள் அலைகடலாக அணிதிரண்டிருப்பது இலங்கை அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல உலக அரசியலுக்கே ஒரு செய்தியை கூறியிருக்கும் சம்பவமே. மக்கள் தன் எழுச்சி வெற்றியை நோக்கி நகர்வது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்றைய சம்பவத்தின் மூலம் பொறுமை காத்து அடங்கியிருக்கும் மக்கள் பொறுமையிழந்து வீதிக்கு இறங்கினால் என்ன நடக்கும் என்பதை மக்களை பலியிட நினைக்கும் எல்லோருக்கும் அறிய வைத்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பைறூஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தொடர்ந்தும் கூறுகையில் மக்கள் சுதந்திரமாக சுவாசிப்பதற்கும் கூட இன்று வரிசையில் நிற்கவேண்டிய அவலநிலை இலங்கையில் இருக்கிறது. ஊழல், அதிகார துஸ்பிரயோகங்கள் காரணமாக சீரழிக்கப்பட்ட வளமிக்க இலங்கை தாய்நாட்டை மீட்க அரசியல்வாதிகளினால் கட்டமைக்கப்பட்ட இனவாத, பிரதேசவாத தடை சுவர்களை உடைத்துக்கொண்டு இனவாத அரசுக்கு எதிராக கொழும்பு உட்பட முக்கிய இடங்களை முடக்கியிருப்பது இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்று திருப்பமாக உள்ளது.
இப்பணியை சிறப்பாக முன்னெடுக்க இரவுபகலாக அரசின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், கஷ்டங்களுக்கு மத்தியிலும் இரண்டு மாதங்களுக்கு மேலாக வீதியில் அமர்ந்திருந்து போராடிய நாளைய தலைவர்களான இளைஞர்கள், தாய்நாட்டை நேசித்த இலங்கையர்கள், மதபோதகர்கள், சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள் உட்பட அவர்களுக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிய அரசியல் பிரமுகர்கள் எல்லோருக்கும் தாய்நாட்டை நேசிக்கும் இலங்கையனாக என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
மக்களின் நேற்றைய தன்னெழுச்சி வெற்றியானது ஒற்றுமைக்கு கிடைத்த பரிசாக நோக்குகிறேன். ஊழலற்ற, மக்களை நேசிக்கும் அரசாங்கம் அமைய புனித ஹஜ்ஜுப்பெருநாள் தினமாகிய இன்று பிராத்திக்கிறேன் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment