இயலாது என்று ஒதுங்குகின்றவர்களை விட சவாலை ஏற்றுக்கொள்பவருக்கு சந்தர்ப்பத்தினை வழங்கி பார்க்கலாம்;மயோன் முஸ்தபா கருத்து



அஸ்லம் எஸ்.மௌலானா-
மிகவும் இக்கட்டான கட்டத்தில்- நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு முன்வராமல் பயந்து ஒதுங்குகின்றவர்களை விட- சவாலை ஏற்றுக் கொண்டு துணிச்சலுடன் முன்வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கிப் பார்க்கலாம் என்று முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

அதிகரித்த கடன் சுமை, கடனை மீள செலுத்த முடியாமை, ரூபாவின் மதிப்பிறக்கத்தின் மூலம் உள்நாட்டு வர்த்தக பாதிப்பு, ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடு, இறக்குமதியில் கட்டுப்பாடு- இவற்றால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவதில் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவை அனைத்தும் உடன் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை விடயங்களாகும்.

இந்த பின்னணியில்தான் மக்கள் போராட்டம் உருவானது, எல்லோரும் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கினார்கள், பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியது, தீர்வுகள் இன்றி நாட்கள் கடந்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆள் ஆளுக்கு குற்றம் சுமத்தி நாட்களை கடத்தினர். அரசை பொறுப்பேற்குமாறு பல தடவை எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் யாரும் முன்வராத சூழல் காணப்பட்டது.

இறுதியாக அகிம்சை வழியில் போராடிய போராட்டகாரர்கள் தாக்கப்பட்டனர், போராட்டக்காரர்களை தாக்கியதால் மக்கள் ஆத்திரத்தில் ஆளும்தரப்பு எம்.பி.க்கள், அமைச்சர்களின் வீடுகள், சொத்துகளை தேடித் தேடி தீ வைத்தனர், பல உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன.

இத்தகைய அபாய சூழலில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலை ஏற்ப்பட்டது. உடனடியாக ஆட்சியை அமைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பல தடவைகள் ஜனாதிபதி அழைத்தார். இறுதி நேரம் வரை இருந்து விட்டு தனது கட்சிக்காரர்கள் ஒரு சிலரின் அழுத்தத்தின் பின்னணியில், அதுவும் ரணிலை நியமிக்க முடிவானதன் பின்னரே- தான் பதவியேற்கப் போவதாக சஜித் அறிவித்தார். இது மிகவும் கோழைத்தனமான முடிவாகும்.

நாட்டில் இவ்வளவு பிரச்சினை உருவாகியும் எதிர்கட்சிகளால் மக்கள் சார்பாக ஒன்றுபட்டு தீர்மானம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டு மக்கள் குறித்து எந்தவித கவலையும் அவர்கள் கொள்ளவில்லை. தங்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தையே குறிக்கோளாக கொண்டு நிபந்தனைகள் பல விதித்தனர். ஒவ்வொருவரும் தனித் தனியாக ஆட்சியமைக்க நினைத்தனர். அது முடியவில்லை. இத்தகைய பின்னணியில் யாரும் ஆட்சிப்பொறுப்பை ஏற்க முன்வராத சூழலில்தான் வேறு வழியின்றி ரணிலை அழைத்து பொறுப்பை கொடுத்துள்ளனர்.

இருந்த போதிலும் ரணிலின் நியமனம் காலத்திற்கு ஏற்றதாகும். நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி குறித்து மிகச்சிறந்த முடிவினை எடுக்கும் ஆற்றல் அனுபவம் வாய்ந்தவர், சர்வதேச இராஜதந்திர உறவும் மதிநுட்பமும் நிறைந்தவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கொண்ட பல திட்டங்களை கடந்த காலங்களில் நாட்டுக்கு அவர் முன்வைத்திருந்தார். ஆனால் அவற்றுக்கு மக்களோ பிற அரசியல் தலைமைகளோ சரியான இடம் கொடுக்கவில்லை.

எவ்வாறாயினும் இன்றைய சூழலில் ரணிலால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை அவரின் எதிரிகள் கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். எவரும் அவர் தகுதியற்றவர், திறமையற்றவர் என்று கூறவில்லை. பிரதமராக பதவியேற்ற ரணிலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு உதவுவதாகவும் உறுதியளித்திருக்கின்றன. இது நெருக்கடியில் சிக்குண்டு தவிக்கன்ற எமது மக்களின் விடிவுக்கு நல்ல சமிக்ஜையாகவே தெரிகிறது.

அதேநேரம் அவர் பதவி ஏற்ற கையோடு டொலரின் விலை ஸ்திரமடைய தொடங்கியுள்ளது, ஜப்பான் மற்றும் எக்ஸிம் வங்கி என்பன உடனடியாக எமக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. பல பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு வரவுள்ள நல்ல செய்திகள் எமக்கு கிடைக்கின்றன.

விரைவில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீனா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையும் அரபு நாடுகளையும் உள்ளடக்கி இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் சர்வதேச பொருளாதார மாநாட்டினை நடத்தி, அதன் மூலம் நிலையான உதவித் திட்டத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை அமைப்பதற்கு பிரதமர் ரணில் திட்டமிட்டுள்ளார். அவரது இந்த இராஜதந்திர முயற்சி வெற்றியளிக்குமாயின்- இலங்கை பொருளாதார மீட்சி பெறுவதற்கு வெகுகாலம் எடுக்காது என்பது திண்ணம்.

இவ்வாறான விடயங்கள்- சிதைந்து போயுள்ள எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும் சிறந்த வழி முறைகளாக நாம் நோக்கலாம். என்னால் இயலாது என்று ஒதுங்குகின்றவர்களை விட- முடியும் என சவாலை ஏற்றுக்கொள்பவருக்கு சந்தர்ப்பத்தினை வழங்கி குறிப்பிட்ட கால அவகாசத்தினையும் வழங்கி பார்க்கலாம் என்று மயோன் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :