காதி நீதிமன்ற விவகாரம். அலி சப்ரி – ஞானசார வேறுபாடுகள் என்ன ? மரணித்தபின்பு யார் வருவார்கள் ? அமைச்சர் செய்யவேண்டிய தியாகம் எது ?



ல்-குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வேதநூல் என்று உலகில் உள்ள இஸ்லாமியர்கள் நம்புவதுடன், யூதர்களும் அதனை ஏற்றுள்ளனர். ஆனால் அரேபியாவில் வாழ்ந்த முகம்மத் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்று இங்குள்ள துறவிகள் கூறுகின்றனர்.

அல்-குர்ஆணில் இஸ்லாம் அல்லாதவர்களை கொலை செய்ய கட்டளையிடப் பட்டுள்ளதாகவும், அதுபோல் அடிப்படைவாதத்தை தூண்டுகின்ற ஏராளமான வசனங்கள் அதில் உள்ளதாகவும், அவைகளை திருத்தம் செய்ய வேண்டும் என்பது பொதுபலசேனா, ராவய பலய போன்ற பேரினவாத இயக்கங்களின் கொள்கையாகும்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக இனவாதிகள் சற்று ஓய்வாக இருந்தாலும், நாடு பழைய நிலைமைக்கு வரும்போது மீண்டும் முஸ்லிம்களுக்கெதிரான தங்களது இனவாத செயல்பாடுகளை தீவிரப்படுத்தக்கூடும்.

திருமண வயதெல்லையை பதினெட்டாக நிர்ணயிப்பதற்கு கடந்த நல்லாட்சி காலத்தில் ரவுப் ஹகீம், றிசாத் பதியுதீன் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியபோது, முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்புக்கள் காரணமாக அது கைவிடப்பட்டது.

கடந்த வருடம் நீதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி அவர்கள் “இள வயது திருமணங்களை தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது” என்று பதவியேற்றபின்பு வெளியிட்ட முதலாவது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதுபோல் காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார். இதற்காக அவர் கூறுகின்ற நியாயமானது “காலில் புண் ஏற்பட்டால், புண்ணுக்கு மருந்து கட்டாமல் காலை கழட்டுவதுதான் தீர்வு” என்பதுபோல் உள்ளது.

இவ்வாறான கருத்துக்களை அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தனது விருப்பத்தின் பேரில் கூறுகின்றாரா ? அல்லது தனக்கு பதவி வழங்கிய ஆட்சியாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவா ? அல்லது ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமாகவா ? அல்லது எல்லோரும் சேர்ந்து முஸ்லிம்களின் பிரதிபலிப்பு என்னவென்று அறிந்துகொள்வதற்கான அறிக்கையா ? என்று தெரியவில்லை.

அமைச்சர் அலி சப்ரி கூறுவதற்கும், பொதுபலசேனா, ராவய பலய போன்ற சிங்கள கடும்போக்கு பேரினவாத இயக்கங்கள் கூறுவதற்கும் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. இரு தரப்பினர்களும் ஒரே கருத்தையே கூறுகின்றனர்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற அடிப்படையில், பௌத்தத்துக்கு மாத்திரம் முன்னுரிமை வளங்கும்பொருட்டு முஸ்லிம்களின் தனியார் சட்டத்தினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பேரினவாதம் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகின்றது.

ஆட்சியாளர்களினால் நேரடியாக இவ்வாறான திருத்தங்களை செய்ய முற்படும்போது சர்வதேசரீதியில் எதிர்ப்புக்கள் ஏற்படும். அவ்வாறன எதிர்ப்புக்களை தடுக்கும் பொருட்டு, முஸ்லிம் பிரதிநிதிகளைக்கொண்டு முஸ்லிம்களின் தனியார் சட்டங்களை முற்றாக இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

ஜானசார தேரர் போன்ற இனவாத கடும்போக்காளர்கள் அல்-குர்ஆனை திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்ற நிலையில், நாங்கள் இவ்வாறான சட்டங்களில் கை வைக்கின்றபோது அது எங்களது பலயீனமாக கருதப்படும்.

எதிர்காலங்களில் ஒவ்வொன்றாக திருத்தம் செய்யும்படி கோருவார்கள். அதனால் எமது தனியார் சட்டம் மட்டுமல்ல, நாங்கள் காலாதிகாலமாக அனுபவித்து வருகின்ற அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் முற்றாக இழக்கவேண்டி ஏற்படும். அதற்கான முதற்படியாக இது அமைந்துவிடும்.

எனவே உலகம் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. அமைச்சர் பதவி உட்பட அனைத்து அதிகாரங்களும், அலங்காரங்களும் கடந்து சென்றுவிடும். மரணம் மட்டுமே நிரந்தரமானது. நாங்கள் மரணித்தபின்பு ஆட்சியாளர்கள் எங்களுடன் வரப்போவதில்லை.

அத்துடன் இஸ்லாத்தை வளர்ப்பதற்காக பல சோதனைகளை சந்தித்து உயிர்த்தியாகம் செய்த எமது முன்னோர்களை நாங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். அற்ப பதவிக்காக எதிர்கால சந்ததிகள் திட்டித் தீர்க்கின்ற நிலைக்கு அமைச்சர் சென்றுவிடக்கூடாது. காதி நீதிமன்றங்களை ஒழிக்கும் நடவடிக்கை என்பது தூரநோக்கற்றது. அதற்கான அழுத்தம் ஏற்பட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விலகுவதுதான் இந்த சமூகத்துக்கு செய்கின்ற மாபெரும் தியாகமாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :