கொரோனா பரவலை கட்டுப்படுத்த உடனடியாக அரசாங்கம் நாட்டை முடக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லையேல் சுகாதார துறையினரை வீதியில் இறக்கி போராட்டங்களை நடத்துவோம் என்று அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அச் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்:-
தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் மாத்திரம் 20 ஆயிரம் வரையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 4 நாட்களில் நானூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று சுகாதார துறையிலும் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை வைத்தியசாலைகளில் உள்ள பிரேத அறைகளிலும் சடலங்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில, ராகம், ரத்தினபுர வைத்தியசாலைகளில் குளிரூட்டிகளுக்கு வெளியிலும் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி நிலைமை மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றது. இதற்கு அரசாங்கத்திடம் பதில் இல்லையா? என்று கேட்கின்றோம். இந்த விடயத்தில் சரியான புள்ளி விபரங்களைக்கூட கூற முடியவில்லை. இதற்கு முன்னர் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பிரதானி வெளியிட்ட புள்ளிவிபரங்கள் தவறானது என்று கூறியே அவர் நீக்கப்பட்டார். ஆனால் இப்போதும் புள்ளிவிபர தகவல்கள் பிழையாகும்.
இதன்படி அந்த புள்ளி விபரங்களுக்குள் உள்வாங்கப்படாத 3,223 தொற்றாளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவத் தளபதியினால் நாளாந்தம் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் இது இருக்கவில்லை. தற்போது அது சேர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தொற்றுப் பரவியுள்ளது. இது ஆபத்தானது. அண்மையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரம் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே மூடப்பட்டுள்ளன. அங்கு அந்த 22 பேருக்கும் எப்படி தொற்றுப் பரவியது என்று தேடுகின்றனர். அதனால்தான் அவர்கள் சிறந்த நாடுகளாக இருக்கின்றனர். அவ்வாறு செய்யாத காரணத்தினாலேயே இலங்கை இந் நிலைமையில் இருக்கின்றது.
இதேவேளை சுகாதார பணிப்பாளர் கூறும் போது மரணித்த 5,000 பேரில் 2 தடுப்பூசிகளையும் பெற்ற 22 பேர் இருக்கின்றனர். அத்துடன் உயிரிழந்த மொத்த எண்ணிக் கையில் 70% வயோதிபர்கள் என்று கூறுகின்றனர். அப்படியென்றால் தடுப்பூசி செலுத்தும் முறையிலும் தவறுகள் உள்ளன. இதனால் இறப்பவர்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
இந்நிலையில் சுகாதாரத் துறையும் கொவிட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் பாதிக்கப்பட்டால் நாடு பாரிய அனர்த்தத்திற்குள் செல்லும் இதனால் திட்டங்களுடன் முடக்கத்திற்கு செல்லுமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம்.
அப்படி செய்தால் 2,3 மாதங்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமாக இருக்கும்.
பல்வேறு நிபுணர்கள் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இதனை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் ஓட்டமாவடியில் உள்ள மயானங்களை போன்ற மயானங்களையும், தகன சாலைகளையும் மாவட்டங்கள் தோறும் திறக்க வேண்டி வரும். இதற்கு யாரும் விரும்பவில்லை. தயவு செய்து கொரோனவை கட்டுப்படுத்துங்கள் என்று கேட்கின்றோம்.
தடுப்பூசி முறைமை மாத்திரம் கட்டுப்படுத்தும் முறையல்ல. சுகாதார துறையில் கொரோனா தொற்றுவோரில் 95 சதவீதமானோர் 2 தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்களே. இதனால் தகனச்சாலைகளை அமைக்கும் பக்கத்திற்கு நாட்டை கொண்டு செல்லாது. கொரோனாவை கட்டுப்படுத்த முடக்கத்தை போட்டு அதனை கட்டுப்படுத்துங்கள். அவ்வாறு கட்டுப்படுத்த முடியாவிட்டால் முடிந்தளவுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.
விஞ்ஞான ரீதியிலான முடக்கத்தை கேட்டு நாங்கள் வெளியில் இறங்குவோம். இதனால் அரசாங்கம் சுகாதார ஊழியர்களை வீதிக்கு இறங்க இடமளிக்காது கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கேட்கின்றோம்,
நோயாளர்கள் அதிகரிக்கும் போது யாரும் அச்சப்படத் தேவையில்லை நாங்கள் கட்டில்களை வழங்குவோம் என்று சவேந்திர சில்வா போன்றோர் கூறினாலும் நாட்டில் எந்த வைத்தியசாலைகளிலும் போதுமான அளவுக்கு கட்டில்கள் இல்லை என கூறினார்.
0 comments :
Post a Comment