யாழில் 29 ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்



யாழ் லக்சன்-
சீனா அரசு நன்கொடையாக , வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் சினோபார்ம் கொவிட் -19 தடுப்பூசி மருந்துகளை 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

தற்போது 3 ஆம் கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு இரண்டு இலட்சம் கிடைக்கின்றன. இதன்மூலம் முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

யாழ் மாவட்டத்தில் நாளைமறுதினம் ஜூலை 29 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கப்படும்.

முதல் நாள் ஜூலை 29 ஆம் திகதி வியாழக்கிழமை 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், ஏனைய மாகாணங்களிலும் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு அவர்களது வதிவிடம் அமைந்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

இவர்கள் தமது ஆசிரிய பணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

முன்களப் பணியாளர்களுக்கான தடுப்பூசியானது ஜூலை 30ஆம் திகதி இரண்டாம் நாள் முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளர்கள் தமது பிரிவிற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு தமக்கான தடுப்பூசி வழங்கும் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தினத்தில் தடுப்பூசி வழங்கப்படும். இத் தடுப்பூசி ஏற்றப்படும் தினம் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரிகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறியத்தரப்படும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.

தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாத நிலையில் படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நோயளர்களின் விபரங்களை அவர்களை பராமரிப்பவர்கள் அப்பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இவர்களுக்கான தடுப்பூசியானது தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இறுதி நாட்களில் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் என்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :