அடக்கம் செய்ய பிரதமர் அனுமதித்திருக்கும் போது
அரசாங்கம் இன்னும் இழுத்தடிக்கக் கூடாது
பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
நல்லடக்கம் செய்வதை அனுமதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்புணர்ச்சியுடன் பாராளுமன்றத்தில் கூறியிருக்கத்தக்கதாக, அதனைத் தடுக்கும் சுகாதாரத் தரப்பு" நிபுணர்கள்" எனப்படும் அதிகாரிகள் யார்? இவ்வாறாக நாட்டில் தேவையில்லாத இனவாத பதற்ற நிலையை ஏற்படுத்துபவர்கள் யார்? அவர்களின் இத்தகைய நடவடிக்கைகளினால் நாட்டையே அதல பாதாளத்தில் தள்ளிவிடுகின்றனர். அரசாங்கம் இந்தப் பிரச்சினையை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கக் கூடாது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) மிகவும் காரசாரமாகத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேட்ட கேள்வியொன்றுக்கு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே "தொழில்நுட்பக் குழுவே நல்லடக்கம் செய்வதைப் பற்றித் தீர்மானிக்கும்" எனப் பதிலளித்தவுடன், எழுந்து நின்ற ரவூப் ஹக்கீம் , சபாநாயகரை விளித்து மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
நேற்று (10) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக திட்டவட்டமானதொரு கூற்றை இங்கு முன்வைத்தார். இதனால் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.இல்லாமலேயே போய் விடுவதை விடவும், தாமதித்தாவது காரியமாவது நல்லது. முதிர்ச்சிமிக்க அரசியல்வாதியொருவரால் முக்கியமான தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் பற்றியும், நல்லிணக்கம் பற்றியும் அவருக்கு விளங்கியிருக்கின்றது. ஆனால், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இங்கு வேறொன்றைக் கூறுகின்றார்.
அவர் அந்த விவகாரம் மீண்டும் தொழில்நுட்பக் குழு எனப்படும் குழுவிடத்தில் செல்ல வேண்டும் என்கின்றார். அக்குழுவினர் வெறுமனே தங்களை தாங்களே விஞ்ஞானிகள் எனச் சொல்லிக் கொண்டு போலியாகப் பாசாங்கு செய்கின்றனர். அவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை.
அமைச்சர் அலி சப்ரிக்கும் இது தெரியும். இந்த சபையில் இருபுறங்களிலும் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்காக குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம்.
இறுதியில் பிரதமர் இந்த சபையில் ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அதைவிட வேறேன்ன வேண்டியிருக்கின்றது? நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக அவர் மிகவும் தெளிவாகச் சொல்லிவிட்டார். இதைவிட அரசாங்கத்தின் சார்பில் வேறு யார் சொல்ல வேண்டியிருக்கிறது?
ஆகையால், சுகாதார அமைச்சில் இதனைத் தடுக்கும் நிபுணர்கள் எனப்படும் அதிகாரிகள் யார்? உரிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
நாட்டில் தேவையில்லாத இனவாத பதற்ற நிலையை ஏற்படுத்துவது யார்? அவர்கள் இத்தகைய நடத்தையினால் இந்த நாட்டையே அதல பாதாளத்திற்குள் தள்ளி விடுகின்றனர்.
இதனை அரசாங்கம் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இந்தப் பிரச்சினை ஜெனீவாவுக்கு சென்றுவிட்டது. இந்த விடயம் அந்த நிலைக்கு உள்ளாவதை யாரும் விரும்புவதில்லை
தயவு செய்த பிரதமரை அவமானப்படுத்திவிடாதீர்கள்.
0 comments :
Post a Comment