வடமாகாணத்திலுள்ள பட்டதாரிகள் குறித்த கேள்வியை எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சில்லறைத்தனமான கேள்விகளை பிரதமரிடம் கேட்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார்.
நாடாளுமன்றம் இன்று காலை கூடியபோது பிரதமரிடம் கேட்கும் கேள்விநேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கேள்வி ஒன்றை முன்வைத்தார்.
வெளிநாடுகளில் குறிப்பாக இந்தியாவில் பட்டப்படிப்புக்களை முடித்து நாடு திரும்பும் மாணவர்களுக்கு, அரச சேவை உத்தியோகம் நிராகரிக்கப்படுகின்றமை மற்றும் 6000ற்கும் மேற்பட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் குறித்த கேள்வியை முன்வைத்தார்.
மேலும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுத் திட்டத்தின் ஊடாக 6 இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகளே வீடுகளுக்கு வழங்கப்படுகின்றது. 10 இலட்சம் ரூபா வரை உதவி வழங்கப்படுமா என்ற கேள்வியை முன்வைத்தார். மேலும் கடந்த அரசாங்கத்தில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை வழங்கப்பட்ட நிலையில் வீட்டுத்திட்ட உதவிகள் அதிகரிக்கப்படுமா என்றும் கேட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அதுபற்றி ஆராய்வதாகக் கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த சபைக்குத் தலைமைதாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இது சில்லறைத் தனமான கேள்வி. பிரதமரிடம் தேசிய கொள்கை ரீதியிலான அல்லது தேசிய மட்டத்திலான கேள்விகளை மாத்திரமே கேட்க அனுமதிக்கப்படும் என்று கூறியதுடன், சாள்ஸ் நிர்மலநாதனுக்கு சில்லரைக் கேள்விகளை எழுப்ப வேண்டாம் என்கிற அறிவுரையையும் வழங்கினார்.
எனினும் இது சில்லறைத் தனமான கேள்வி அல்ல என்று குறிப்பிட்டு நியாயத்தை தெளிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், 6600 குடும்பங்களின் பிரச்சினைகள் என்பதால் இது சில்லறைப் பிரச்சினையாக எண்ணவேண்டாம் என்றும் சபாநாயகருக்கு சிங்கள மொழியிலேயே சுட்டிக்காட்டினார்
0 comments :
Post a Comment