J.F.காமிலா பேகம்-
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், கம்பஹா மாவட்டத்திலுள்ள பாரதூர குற்றங்களை செய்தவர்களுக்கான புனர்வாழ்வு மையமொன்றில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகிய அவருக்கு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் விளக்கமறியலில் இடப்படும் முன்னர் கைதிகள், தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு – பல்லன்சேன புனர்வாழ்வு முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த பல்லன்சேன முகாமிலேயே இதற்கு முன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதேவேளை விளக்கமறியல் உத்தரவைப் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பினை சபாநாயகர் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல கோரிக்கை முன்வைத்தார்.
இந்த கோரிக்கை குறித்து பதிலளித்த சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கான கோரிக்கையை முன்வைத்தால் அனுமதியளிப்பது குறித்து ஆராய முடியும் என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment