J.f.காமிலா பேகம்-
மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய நாளில் 130 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், ஆயிரத்து 800 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய வைத்தியசாலை, கம்புறுகமுவ வைத்தியசாலை, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை, காத்தான்குடி வைத்தியசாலை, தெல்தெனிய வைத்தியசாலை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலை என்பவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 14 வெளிநாட்டவர்கள் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 29 பேர் குணமடைந்த நிலையில், நேற்றைய தினம் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 293 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்க்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 909 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலை சார்ந்து ஏற்பட்ட கொரோனா தொற்றில், 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment