எம்.எச்.எம்.றஸான்-
மேலும் கல்முனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து . பொது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி வன சீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைசருக்கு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதானது, காட்டு யானைகள் பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் பிரவேசித்து பொது மக்களை அச்சுறுத்தி வரும் செயற்பாடானது கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதனால் பொது மக்கள் அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர் எனும் விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றேன்.
கல்முனை மாநகர சபை எல்லைக் உற்பட்ட கல்முனை கிரீன் பீல்ட் வீடமைப்பு திட்ட பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (8) இரவு வேளையில் கூட்டமாக படையெடுத்து வந்த காட்டுயானைகளின் நடமாட்டத்தினால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு வேளைகளில் தமது தேவைகளின் நிமிர்த்தம் வெளியில் வருவதற்கும் அச்சமான நிலைமையை பொது மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இப்பிராந்தியத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான யானைகளின் வருகை பயிர்ச் செய்கைகளையும், உடமைகளையும் சேதப்படுத்தி பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி, உயிர் ஆபத்தையும் ஏற்படுத்த வாய்ப்பாய் அமைந்துவிடும்.
கல்முனை கிரீன் பீல்ட் வீடமைப்பு திட்ட பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள நெல் வயல் காணிகளில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் அண்மித்து நிலைகொண்டுள்ள இக் காட்டு யானைகளின் கூட்டம் இரவு வேளைகளில் மீண்டும் மக்கள் குடியிருப்பு பிரதேசத்திற்குள் பிரவேசிக்க வாய்ப்புள்ளது என்பதனால் மக்கள் அச்சமடைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தி வரும் இக் காட்டு யானைகளின் கூட்டத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், குறித்த காட்டு யானை கூட்டத்தினை இப் பிரதேசத்திலிருந்து பாதுகாப்பான காடுகளுக்கு அனுப்பிவைக்குமாறும் மற்றும் காடுகளில் இருந்து இப்பிரதேசத்தினை நோக்கி காட்டு யானைகள் வராமல் இருப்பதற்கு காடுகளில் உள்ள மின்சார வேலிகளின் கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இக்கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய அலுவலகத்தின் உதவி பணிப்பாளர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் குறித்த விடயத்தினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் தெரியப்படுத்தியும் உள்ளார்.
0 comments :
Post a Comment