20வது திருத்தச் சட்டம் நாட்டை நாகரீகத்திலிருந்து அநாகரீகத்தை நோக்கி கொண்டு செல்லும்! அனுரகுமார


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-


ரசாங்கம் கொண்டு வரவுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நாட்டை நாகரீகத்தில் இருந்து அநாகரீகத்தை நோக்கி கொண்டு செல்லும் நடவடிக்கை என JVPயின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

JVPயின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்:-

அரசாங்கம் 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை தற்போது வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. நாடு எதிர்நோக்கும் அடிப்படையான பிரச்சினை அரசியலமைப்புச் சட்டம் என நாங்கள் நம்ப மாட்டோம்.

இதனால், அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் அல்லது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் வாழ்வதற்கான பிரச்சினை, சட்டத்தின் ஆளுமை இன்மை, அன்றாட வாழ்வாதார பிரச்சினை போன்ற அடிப்படையான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என நினைக்கவில்லை.

அரசியலமைப்புச் சட்டமே நாட்டின் அடிப்படையான சட்டம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குடி மக்கள் என்ற வகையில் அந்த சட்டத்திற்கு நாம் அடிப்பணிய வேண்டும்.

இதனால், அதில் செய்யும் மாற்றங்கள், சேர்ப்புகள், நீக்கங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு காரணமாக அமையும்.

தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், நீதிபதிகள், சட்டமா அதிபர் ஆகியோரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கே உள்ளது.

தற்போது கொண்டு வரவுள்ள திருத்தச் சட்டத்தின் படி அந்த நியமனங்களை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவரது நியமனத்தை தவிர ஏனைய உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி தன்வசப்படுத்தியுள்ளார்.

உண்மையில் பிரதம நீதியரசரே நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக இருப்பார். 19வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் முன்னர் ஜனாதிபதிக்கு இந்த அதிகாரங்கள் இருந்தன. அந்த காலத்திலேயே தனியார் வங்கி ஒன்றின் தலைவராக இருந்த நபர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

20வது திருத்தச் சட்டமானது நீதித்துறை அதிகாரத்தை முற்றாக ஜனாதிபதி தன்வசப்படுத்துவதாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் பிரதமர் உட்பட அமைச்சரவை வழிநடத்தப்படும். அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம், துறைகளை ஒதுக்குதல், அமைச்சர்களை நீக்குதல் அதிகாரங்களை ஜனாதிபதி தன்வசப்படுத்தியுள்ளார்.

இது பழங்கால யுகத்தில் இனக்குழு தலைவர் அனைத்தையும் தன்வசப்படுத்திக்கொள்வதற்கு இணையானது என JVPயின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :