இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்


றாசிக் நபாயிஸ்-

லங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக கலைப்பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றதனைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக கலைப்பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றதனைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று (19/08/2020) பல்கலைக்கழக, கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பதிவாளர், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு தலைமைப்பீடாதிபதிகளாக தெரிவுசெய்யப்பட்ட பேராசிரியர்களை பொன்னாடை போற்றி நினைவு சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் முதன் முறையாக கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆசிரியர்கள் தலைமைப் பேராசிரியர் பதவியினைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த எந்தவொரு விரிவுரையாளரும் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலைத்துறையினைச் சேர்ந்த இலங்கை முஸ்லிம் கல்விமான்கள் எவரும் இத்தகைய கல்விசார் உயர் பதவியினைப் பெற்றிராத ஒரு சூழ்நிலையில், இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் இவ்வுயர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது என கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது தலைமை உரையில் தெரிவித்தார்.

அவ்விருவருள் ஒருவர் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் கீழ் இயங்கும் மொழித்துறையினைச் சேர்ந்த, அத்துறையின் முன்னாள் தலைவருமாகிய பேராசிரியர் றமீஸ் அப்துல்லா ஆவார். இந்நியமனத்திற்கு முன்னரே இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பேராசிரியராக (Professor) பதவி உயர்வு பெற்றிருந்த றமீஸ் அப்துல்லா, நாடறிந்த கல்விமானும், பேச்சாளரும், இலக்கியச் செயற்பாட்டாளருமாவார். 

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப ஆசிரியர்களுள் ஒருவராக விளங்கும் இவர், இன்று முதல் தமிழ்த்துறை தலைமைப் பேராசிரியராக (Chair Professor) நியமனம் பெற்றுள்ளமை இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். விசேடமாக, இலங்கை வரலாற்றில் தமிழ்த்துறை முஸ்லீம் கல்விமானொருவர் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படுவதும் இதுவே முதற்தடவையாகும்.

மற்றையவர் புவியியல் துறையின் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் ஆவார். இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராக விளங்கும் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், கலை கலாசார பீடத்தின் முன்னாள் பீடாதி மற்றும் புவியியல் துறையின் தலைவர் ஆகிய முக்கிய பொறுப்புக்களை வகித்தவராவார். புவியியல் துறையின் உதவிப் பேராசிரியராக விளங்கிய இவர், இன்று முதல் அத்துறையின் தலைமைப் பேராசிரியராக (Chair Professor) நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு விடயமாகும். இலங்கை வரலாற்றில் புவியியல்துறை முஸ்லீம் கல்விமானொருவர் தலைமைப் பேராசிரியராக நியமிக்கப்படுவதும் இதுவே முதற்தடவையாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :