பெருந்தோட்டத் துறையில் முதியவர்கள் மறக்கப்பட்டவர்களாக அல்லது உணர்வுகள் மட்டத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருவது மிகப் பெரும் சமூக அவலமாகும் என நுவரெலியா மாவட்டத்தில் கோடரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரும், சட்டத்தரணியும், மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன்
மலையகக் குடும்பங்களில் பொருளாதார ஸ்திரமற்ற சமூக கட்டமைப்பில் உழைக்க முடியாத முதியோர் சுமைகளாகக் கணிக்கப்படுகிறார்கள். அவர்களது ஓய்வூதிய பணத்துடன் அவர்களின் உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுத்து விடக்கூடாது. இவர்களுக்கான தேவை என்பது சமுர்த்தி கொடுப்பனவு அல்லது ரூபாய் 2000 கொடுப்பனவோடு மட்டுப்படுத்தப்படுவதல்ல.
இவர்களின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் அன்போடும் பாசத்தோடும் சம்பந்தப்பட்டது. வீட்டைப் பார்த்துக் கொள்ளும் காவலாளியாகவோ அல்லது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவாகவோ இவர்கள் குடும்ப உறுப்பினர்களால் அடையாளப்படுத்தப்பட்டு விடக்கூடாது.
இவர்களுக்கான தேவைகளும் எதிரப்பார்ப்புக்களும்,அபிலாசைகளும் இவர்களின் வயோதிபத்துடன் ஒப்பிடக்கூடாது இவர்களின் மனித உணர்வுகள் இவர்கள் வாழும் வரை மதிக்கப்பட வேண்டும். இவர்களின் மறைவுக்குப் பின்னர் இவர்கள் ஆசைப்பட்ட உணவுகளை வைத்து படைப்பதை விட வாழும்போதே இவர்களை வாழ விட வேண்டும்.
மலையகத்தை பொறுத்தவரை முதியவர்களுக்கான அரசாங்க கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யும் நிலை பல தோட்டங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. காலையில் இருந்து வரிசையில் இருந்தும் கொடுப்பனவு கிடைக்காமல் வெருங்கையோடு வீடு திரும்புவதுமாய் எம் முதியோர்கள்; முகம் கொடுக்கும் இன்னல்கள் மிகவும் வேதனையளிக்கிறது இதற்கான நிரந்தர தீர்வை விரைவில் பெற்றுத் தருவதற்கான சகல அரசியல் அழுத்தங்களையும் பிரயோகிக்க நான் தயாராக இருக்கிறேன்.
அதேபோன்று இவ்வாறானவர்களிடம் ஒழிந்திருக்கும் வழிபாட்டு கலை,கலாசார உணர்வுகள் வரலாற்றுப்பதிவுகள், இயற்கை உணவு முறை, கைமருத்துவமுறை, பாரம்பரிய உறவு முறைகள் அனைத்தையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்களை அனுதாபத்துக்குறியவர்களாக ஆக்கிவிட கூடாது. இதுவும் எமது சமூகக் கடமையாகும். ஏனெனில் இன்றைய குருத்தோலைகள்தான் நாளைய பழுத்தோலையாகவும் மாறவுள்ளன என்றார்.