கொரோனா நெருக்கடியையடுத்து பலரும் பலகோணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிவருகின்றனர். அந்தவகையில் ஒரு பிரதேச செயலாளர் தனது வேதனத்தில் தனது பிரிவுக்குட்பட்ட மிகவும் வறுமைக்குட்பட்ட மக்களுக்கு நிவாரணமளித்துள்ளார்.
இம்மனிதாபிமான சம்பவம் அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ள பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆம் பொத்துவில் பிரதேச செயலாளர் இராசரெத்தினம் திரவியராஜ் என்பவரே இவ்வாறு பொத்துவில் 6ஆம் பிரிவிலுள்ள மிகவும் வறுமையால் வாடுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கியுள்ளார்.
அவரே யாருக்கும்கூறாமல் தானாக வீடுதேடிச்சென்று வழங்கியமை சிறப்பம்சமாகும்.
இது தொடர்பில் அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார். அவருடன் சென்ற உத்தியோகத்தரை அணுகி கேட்டபோது அவர் கீழ்வரும் தகவல்களையும் கூறினார்.
வழமையாக பிரதேசசெயலாளரது பிறந்த தினம் மற்றும் திருமணதினம் இரண்டிலும் சேர் தலா சுமார் 25ஆயிரம் ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகளை வழங்குவது வழக்கம்.
இம்முறை கொரோனாப்பாதிப்புக்குட்பட்ட 25குடும்பங்களுக்கு இனமதபேதம் பார்க்காமல் நேற்றுமுன்தினம் பொதிகளை வழங்கியுள்ளார்.
சேருடன் சென்றவேளை சுமார் 12.30மணியிருக்கும். ஒருமுஸ்லிம் குடும்பம் தேனீர் போட்டுக்கொண்டிருந்தது. என்ன இந்தநேரத்தில் தேனீர்? என்று சேர் அன்பாகக் கேட்டதற்கு அவ்வயோதிப்பெண்மணி 'இதுதான் மனே எமது பகல்சாப்பாடு' என்று கூறினார். நாம் அதிர்ந்துவிட்டோம்.
இன்னமும் இவ்வாறான குடும்பங்கள் இருந்துகொண்டுதானிருக்கின்றன. என்றார்.