எம்.எம்.ஜபீர்-
உலகத்தையே அச்சுறுத்தும் இந்த கோரேனா வைரஸை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் திண்டாடும் நிலையில் இலங்கையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இவ்வளவு தூரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையை உலக நாடுகள் ஜனாதிபதி தலைமையிலான இவ் அரசாங்கத்தினை பாராட்டுவதாக முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.
கல்முனை அலுவலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி நாட்டு மக்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து கோரோனா வைரஸை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை என்பது உலகத்தினாலும், நாட்டு மக்கள் அனைவரினாலும் போற்றப்படுகின்ற விடயமாகும். அதுமட்டுமல்லாது வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கிக்கிடந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் என்று இரு மாதங்களுக்கு ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. கொடுப்பனவு வழங்கப்பட்ட விடயமானது அரசாங்கத்திற்கு நற்பெயர் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எதிர்க்கட்சியினர் அதனை அரசியலாக காட்டி தேர்தல் ஆணையாளர் ஊடாக தடுத்துவிட்டார்கள்; எனவே கோரோனா வைரஸ் தொற்று காலத்தில் எங்களுடைய நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டப்பட வேண்டும் அதற்கு நன்றிக்கடனாக இருப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினை பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சியமைக்க பங்களிப்பு செய்வர்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
நாட்டுக்கு பொருளாதார சிக்கலினை ஏற்படுத்திய எதிர்கட்சியினர் பாராளுமன்றத் தேர்தலை பிற்போடவேண்டும், மீண்டும் பழைய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என கூறித்திருகின்றார்கள். இதனை முறியடிக்க விரைவாக பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதன் மூலமாகத்தான் நாட்டின் பொருளாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.