சாய்ந்தமருது கமு/ரியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா நேற்று (29) வெகுவிமர்சையாகவும், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நினைவில் நிற்கும் வகையிலும் நடைபெற்றது.
“வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக் கொடுப்பதே” எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இவ்விழா, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது. இதன்படி, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய புதிய பாடத்திட்டம் இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை வலயக் கல்வி பிரதி பணிப்பாளருமான (ICT) திருமதி ஏ. அஸ்மா மலிக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையில், ஆரம்பக் கல்வியே ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அடித்தளம் எனக் குறிப்பிட்ட அவர், புதிய கல்வி முறைகள் மாணவர்களின் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் நற்பண்புகளை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெற்றோர்களின் பங்களிப்பும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் இணைந்தாலே தரமான கல்வி உருவாகும் என்றும், அதற்கான சிறந்த முன்மாதிரியாக ரியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயம் திகழ்வதாகவும் அவர் பாராட்டினார்.
விழாவில் புதிதாக பாடசாலையில் இணைந்த முதலாம் தர மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டதுடன், பாடசாலை நிர்வாகத்தினரால் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்வுகள் விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். கல்விப் பயணத்தின் முதல் படியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய மாணவர்களின் முகங்களில் காணப்பட்ட உற்சாகம் விழாவின் வெற்றியை வெளிப்படுத்தியது.

0 comments :
Post a Comment