உலகில் பல நாடுகளிலும் வாழும் அனைத்து பௌத்தர்களாலும் வெசாக் தினமான மே மாத பௌர்ணமி நாளானது புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (பரி நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி மயிலங்கரச்சை மஹிந்தா ராம விகாரையில் வெசாக் தினத்தினை முன்னிட்டு வெசாக் தோரணம் அமைக்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
விகாரையின் விகாராதிபதி கடுகஸ்தோட்ட மஹிந்தா லங்கார தேரர் தலைமையில் இராணுவம் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் விகாரையில் வெசாக் தினத்தினை முன்னிட்டு வெசாக் தோரணம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையிலுள்ள அனைத்து விகாரைகளிலும் விசேட வழிபாடுகள் இடம்பெறுவதுடன், இம்முறை வெசாக் தினம் இலங்கையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஈஸ்டர் குண்டுதாக்குதல் காரணமாக கடந்த வருடம் பாதுகாப்பு தரப்பின் ஆலோசனைக்கு அமைய பொது வெளியில் தோரணங்களைக் காட்சிப்படுத்தல், அன்னதானம் வழங்குதல் போன்றன மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அதேபோன்று இம்முறை கொரோணா வைரஸ் தாக்கத்தால் வெசாக் தினத்தை முன்னிட்டு நடைபெறும் பிரதான நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நாளில் இலங்கையில் புத்தபெருமானின் வாழக்கை வரலாற்றை முன்னிறுத்தி பலவித சமய நிகழ்வுகள் இடம்பெறுவதுடன், இக்காலப் பகுதியில் அன்னதான வழங்கும் பந்தல்கள், தோரணங்கள், வெளிச்சக் கூடுகள் கட்டப்பட்டு நாடு முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கும் என்பது குறிபிடத்தக்கது.