முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கும் என்று நான் நம்புகின்றேன். அதற்கான முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. அத்தோடு நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை என முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்
எமது நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இலங்கை விளங்குகின்றது. இதற்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் தூர நோக்கு, தெளிந்த சிந்தனை ஆகியவற்றுடன் கூடிய முன்னெடுப்புகளே காரணம் ஆகும்.
மைத்திரிபால சிறிசேன அல்லது ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டின் தற்போதைய தலைவர்களாக இருந்திருந்தால் எல்லாமே அழிவுமயமாக மாறி இருக்கும் என்று இந்நாட்டு மக்கள் அனைவருமே வெளிப்படையாக பேசுவதை செவிமடுக்க முடிகின்றது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதாலோ அல்லது முடிவுறுத்தப்படுவதாலோ கொரோனா பல்கி பெருகி விடும் என்கிற அச்சம் அடிப்படை அற்றதும் அனாவசியமானதும் ஆகும். கடந்த நாட்களில் கடற்படையினருக்குதான் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. மாறாக பொதுமக்களுக்கு அல்ல.
எனவே பொதுமக்களின் நடமாட்டங்கள் போன்றவை மூலம் கொரோனா தொற்று பெரிதும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எழுந்தமானமாக சொல்லி விட முடியாது.
ஆனால் எதிர் கட்சிகள் அரசியல் நன்மைகளை மாத்திரம் உத்தேசித்து இவ்வாறான பொய்களை கட்டவிழ்த்து விட்டு மக்களை குழப்ப முயற்சிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.