நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகளினால் குடியிருப்புகள் சேதமடைந்து வீதிப் போக்குவரத்துகளும் பாதிப்படைந்துள்ளது.
மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு 140 மில்லிலீட்டர் மழை பெய்துள்ளமையினால் மேல் கொத்மலை காசல்ரி, மவுசாசாகலை, கெனியன் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் மவுசாகலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் நோட்டன் விமலசுரேந்திரன் நீர்தேக்கத்தில் நீர் நிறைந்து வழிவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்
இதே வேலை நேற்று இரவு முதல் பெய்த அடை மழையினால் அட்டன் நோட்டன் பிரதான வீதியின் வனராஜா சமர்வில் பகுதியில் 16/05 அதிகாலை மண்மேடு சரிந்துள்ளமையினால் அவ்வீதியின் போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருகிறது
மேலும் அட்டன் பொகவந்தலா பிரதான வீதியில் நிவ்வெளிகம பகுதியில் பாரிய மரத்தோடு மண்மேடு சரிந்ததில் அவ்வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரலீனா பகுதியில் பாரிய கற்பாறை ஒன்று குடியிருப்பின் மீது சரிந்து வீழ்ந்ததில் குடியிருப்பு அறையொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்
காலநிலை சீர் கேட்டினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் அட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மின் இணைப்பை வழங்க மின்சாரசபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருவதுடன் பாதை அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் வீதிகளில் ஏற்பட்டுள்ள மண்மேடு சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.