உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு சட்டத்தின் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மலையக பிரதேசமான இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஹப்புகஸ்தென்ன பகுதியில் வாழும் 85 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஹப்புகஸ்தென்ன பகுதியில் வாழ்ந்த மக்களின் பட்டினித்துயரத்தினை நேரிலே கண்கூடாக அறிந்த வாழைச்சேனையை சேர்ந்த அருட்தந்தை நேசராஜா சபிலாஸ் இம்மக்களுக்கு உதவ வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் தனது பாடசாலையான வாழைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவ நண்பர்களை தொடர்பு கொண்டு உதவி கோரி உள்ளார்.
இதன்பிரகாரம் வாழைச்சேனை தேசிய பாடசாலையின் 2005ம் சாதாரண தரம் மற்றும் 2008 உயர்தர மாணவர்கள் முன்வந்து தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.
இவ்வுதவியை பெற்ற அருட்தந்தை நே.சபிலாஸ் சுமார் 85 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளதுடன், மேலும் தனது பாடசாலை நண்பர்களின் உதவியோடு மேற்படி சேவையினை தொடரும் செயற்பாட்டினை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மாகாணம் விட்டு இன்னொரு மாகாணத்தில் வாழும் மக்களின் பசியைப் போக்க உதவிய வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் 2005ம் சாதாரண தரம் மற்றும் 2008 உயர்தர மாணவர்களின் இம்முயற்சிக்கு ஹப்புகஸ்தென்ன பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
அன்றாட உழைப்பில் வாழ்க்கை நடாத்திய மக்கள் பலர் உணவுக்கு வழி இன்றி மிகவும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு பல நல் உள்ளங்கள் நிவாரணங்களையும் வழங்கி வருகின்றனர். ஆனால் பலர் அறியாத துயர சம்பவங்களும் சில பிரதேசங்களில் நிகழ்ந்தமையும் மறுக்க முடியாத ஒன்று. அந்தவகையில் மலையகத்தின் பல பிரதேசங்களில் வாழும் மக்கள் பட்டினியால் ஒரு நேர உணவு கூட உண்ண முடியாத நிலைக்குள் சிக்கித் தவித்தனர். ஏனைய பிரதேசங்களை விட இப் பிரதேச மக்களுக்கு போதிய உதவிகள் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.