நீர்கொழும்பு, பெரியமுல்லை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இனந்தெரியாத சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் வெட்டுக்காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை (09) இரவு 10 மணியளவில், குறித்த உணவகத்திற்கு உணவு உட்கொள்ள வந்த சிலர் மதுபானம் அருந்த முற்பட்ட போது, உணவகத்தின் உரிமையாளர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த குறித்த நபர்கள் ஆயுதங்களை எடுத்துவந்து உணவகத்திற்கு சேதம் விளைவித்ததுடன், உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலில், வெட்டுக்காயங்களுக்குள்ளான உணவகத்தின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உணவகத்தின் உரிமையாளரும் மேலும் ஒரு ஊழியரும் பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பெரியமுல்லை பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

