ஜனாதிபதித் தேர்தலின் போது உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் சம்பவத்தை பிரச்சாரம் செய்தேதான் ராஜபக்ச தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். எனவே, பொதுத்தேர்தலில் இந்த அரசாங்கத்தை ஓட ஓட நாம் விரட்டியடிப்போம் என UNPயின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் ஏற்பாட்டில் மீரிகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசும் போது சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாவது:-
அரசியலமைப்பின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சை தன்னகத்தே கொண்டிருக்க முடியாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எவ்வாறு பாதுகாப்புத் துறையினருக்குக் கட்டளையிட முடியும்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைப் போன்று மீண்டுமொரு சம்பவம் இடம்பெற்றால் நாட்டில் பொறுப்புக் கூறுவதற்கு யாரும் இல்லாத நிலையே இன்று நாட்டில் உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பாரளுமன்றத்தில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. நானும் அதில் அங்கத்துவம் வகித்த போதிலும் , 68 பக்கங்களில் நான் தனியாக ஒரு அறிக்கை தயாரித்திருக்கின்றேன்.
அதில் 1வது குற்றவாளியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், 2வது குற்றவாளியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், 3வது குற்றவாளியாக நீதியமைச்சரையும், 4வது குற்றவாளியாக முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் குறிப்பிட்டிருக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று UNPயில் பாரளுமன்ற உறுப்பினராக அங்கத்துவம் வகித்த சிலர் வெளியிட்ட கருத்துக்கள் என்பனவே ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியடைக் காரணமாக அமைந்தது.
2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் 100 நாட்களில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினோம். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல் காலத்தில் வியத்மக அமைப்பினரால் எழுதிக் கொடுக்கப்பட்ட குறிப்புக்களை வாசித்தமையால் அவருக்கு வழங்கிய வாக்குறுதிகள் கூட நினைவில் இல்லை.
எனவே, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.