நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகத்திற்குட்பட்ட 230 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்திய பணிப்பாளர் சேனக்க தலகல்ல தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;...நுவரெலியா மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுத்த போதிலும் நுவரெலியா சுற்றுலா பிரதேசமாக காணப்படுவதனால் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்தது அவர்கள் எவ்வித தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தாத நிலையில் மாவட்டம் எங்கும் சுதந்திரமாக சுற்றித்திரிந்தனர்.அததோடு வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய போதிலும் அவர்களும் பல்வேறு காரணங்களை காட்டி வெளியில் செல்ல ஆரம்பித்தனர்.அது மாத்திரமின்றி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக சுற்றுலா வருபவர்களும் அதிகரித்தனர்.
இந்த செயப்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காகவே நாங்கள் நீதி மன்ற உத்தரவினை பெற்றுக்கொண்டோம்.
அத்துடன் இன்று ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதனால் கொவிட் 19 வைரஸினை கட்டுப்படுத்துவதற்கு சாதமாக உள்ள அதே நேரம் தொடர் விடுமுறை காரணமாக இன்று தோட்டப்பகுதிகளுக்கு தலைநகரங்களிலும் ஏனைய மாவட்டங்களிலும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் வீடுகளை நோக்கி வந்துள்ளார்கள்.இவர்கள் எங்கு வேலை செய்தார்கள்? என்ன வேலை செய்தார்கள்? என்பது தெரியாது அத்தோடு தோட்டங்களில் சமூகமாக வாழ்வதனால் இவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
அத்தோடு இன்று பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பலர் குடும்பம் குடும்பமாக செல்கிறார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகரிக்கின்றது எனவே ஊரடங்கு தகர்த்தப்படும் போது குடும்பம் குடும்பமாக செல்லாது தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஒருவர் மாத்திரம் சென்றால் அது எமக்கு பெரும் உதவியாக இருக்கும்.
அதே வேளை எமது வைத்தியசாலைகளில் வழமை போல் சேவைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன.
இவ்வாறான ஒரு சூழ் நிலை கொவிட் 19 வைரஸ் ஏற்பட்ட அறிகுறிகள் தென் பட்டால் அதாவது தொடர் காய்ச்சல்,இருமல்,தடிமல்,சுவாசிக்க சிரமம்,சதை பிடிப்பு போன்றவை காணப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதே நேரம் ஏனைய விடயங்களுக்காக வைத்தியசாலைக்கு செல்வதனை முடிந்தளவு தவிர்த்து கொள்ளுமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இன்று முழு நாடே கொரோனா அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருக்கின்ற நிலையில் அதற்கு முக்கியத்துவம் அளித்து செயப்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன. என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை ஹட்டன் 09 பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் 76 பேர் தனிமைபடுத்தப்பட்டுளள்hர்கள் இவர்கள் வீட்டைவிட்டு 14 நாட்களுக்கு வெளியேற கூடாது என ஹட்டன் நீதவான் ஜெ.டொஸ்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த உத்தரவில் அவர் தொடர்;ந்து குறிப்பிடுகையில் சுற்றுலா விடுதிகள், பொது மலசலக்கூடங்கள், பஸ்கள் ஆகியவற்றில் கிருமி ஒழிப்புகளை முன்னெடுக்குமாறும் சிறப்பு அங்காடிகளில் பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் ட்ரொலி மற்றும் கூடைகளைப் பயன்படுத்தும்; போதும் அவை கிரிமை நாசினி தெளித்து சுத்தப்படுததிய பின் பயன்படுத்த வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பொலிஸ், தலைமையகத்திற்குட்பட்ட மஸ்கெலியா, நோர்வூட், நல்லதண்ணி, பொகவந்தலாவை, கினிகத்ஹேன, நோர்டன் பிரிட்ஜ், வட்டவல மற்றும் திம்புலபத்தன ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, நோய்த்தொற்று தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 14 நாட்கள் வரை அமுலில் இருக்கும் எனவும் ஹட்டன் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.