நானிலம் போற்றும் நாஹூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழா சனிக்கிழமை(25) மாலை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் ஆரம்பமானது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் S.M.A அஸீஸின் தலைமையில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது பக்கீர் ஜமாஅத்தினர், உலமாக்கள், நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபா றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான பெப்ரவரி 6 ஆம் திகதி மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கிவைக்கப்படவும் உள்ளது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் , மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன் , ஏ.எம்.அப்துல் லத்தீப் , விசேட அதிரடிப்படை ,கடற்படையினர், பொலிஸார் ,ஆகியோர் இணைந்திருந்தனர்.