நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்த பாதிப்புக்களுக்கு உள்ளான இடங்களில் மண்மேடுகளை அகற்றல் மற்றும் மீட்பு பணிகளில் துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க இடர் முகாமைத்துவ நிலையம், மற்றும் முப்படையினருக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் (01.12.2019) அன்று காலை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விசேட கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி பணி நிறைவேற்று உதவி மாவட்ட செயலாளர் அமில நவரதத்ன, பிரகேடியர் அத்துல ஆரியரத்ன உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய பணிப்பாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நுவரெலியா மாவட்டத்தில் (30) காலை முதல் பெய்த கடும் மழை காரணமாக இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளான நுவரெலியா மாவட்டத்தில் நடந்தேறி உள்ள பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டது.



